Thursday, August 31, 2017

இன்னுமொரு இன அழிப்பு...? - எஸ்.செந்தில், ரகுராம்

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவழிப்புக் கொடுமை பற்றிய இக்கட்டுரை 2012 ஆகஸ்டில் புதுவிசை 36வது இதழில் வெளியானது.
           
மியன்மாரின் (பர்மாவின்) வடமேற்கிலுள்ள அரகான் பகுதியில் வாழும் சிறுபான்மை இனமான ரோஹிங்ய (Rohingya) முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் கலவரங்களும் ஜூன் 2012 முதல் தீவிரமடைந்துள்ளன. ரமலான் நோன்பைக்கூட அமைதியாக மேற் கொள்ள முடியாதபடி அவர்கள் மீதான தாக்குதல்கள் இப்போதும் நீடிக்கின்றன. இந்தக்கலவரங்களை உள்ளூர் புத்தபிக்குகளும் அப்பகுதியின் பெரும்பான்மையினரான ரக்கயன் இனத்தைச் சேர்ந்த வகுப்புவாதிகளும் வழிநடத்துகின்றனர். பர்மிய பாதுகாப்புப்படையினரும் இக்கலவரங்களின் கூட்டாளிகளாக இருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை  தெரிவிக்கின்றது. கொலை, வல்லாங்கு, முஸ்லிம்களை விரட்டியடிப்பது என இந்த பாதுகாப்புப்படையின் இனவெறிச் செயல்கள் அமைந்துள்ளன. இந்தியா இந்துக்களுக்கே எனக் கூறப்படுவது போலவே பர்மா புத்த பர்மி யர்களுக்கே எனும் வாதம் இந்தக்கலவரத்தின் பின்னணியாக உள்ளது. 

இதுவரை 80,000க்கும் அதிகமான ரோஹிங்ய முஸ்லிம்கள் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து அகதிகளாக பங்களாதேஷிற்கு புகலிடம் தேடிச்சென்றுள்ளனர்.  பங்களாதேஷிற்கு போய்ச் சேர்ந்தாலும் சரி, அல்லது போகும் வழியில் கடந்தாகவேண்டிய நஃப் ஆற்றில் மூழ்கிச் செத்தாலும் சரி பர்மாவிலிருந்து இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்கிற பதைப்பே இவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா (Sheikh Hasina)  அல்ஜஸிர (aljazeera) ஆங்கில பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க இயலாது எனக் கூறியுள்ளார். மியன்மரின் அதிபரான தீன் சென் (Thein Sein) முஸ்லிம் சிறுபான்மையினரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் (1948 சுதந்திரத்திற்கு முன்னால்) குடியேறிய ரோஹிங்ய மக்களுக்கு மட்டுமே பர்மிய அரசு பொறுப்பேற்க முடியுமென்றும் அதன் பிறகு வந்தேறியவர்களுக்கு பொறுப்பேற்க இயலாது எனவும் இவர் 2012 ஜுன் மாதத்தில் தெரிவித்துள்ளார். எட்டாம் நூற்றாண்டிலிருந்தே பர்மாவில் ரோஹிங்ய முஸ்லிம்களும் வாழ்ந்துவரும் நிலையில் அவரது இந்த அறிவிப்பு வரலாற்றைத் திரிப்பதாகும். (இந்த தீன் சென்னைத்தான்  பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக உலகநாடுகள் வெகுவாகப் பாராட்டுகின்றன. இதேவகையான பாராட்டு நரேந்திர மோடிக்கும் கிடைத்திருப்பது தற்செயலானதல்ல)

புத்தபிக்குகளின் இக்கலவரத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உலக ஊடகங்களும் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் கண்டுங்காணாது இருக்கின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நவிபிள்ளை விடுத்த ஒன்றிரண்டு அறிக்கைகளைத் தாண்டி செயல்பூர்வமாக எதுவும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. புத்தபிக்கு களை அமைதிவழிக்கு திரும்பும்படி அறிவுரை கூறி இவ்வினப்படுகொலையைத் தடுக்குமாறு தர்மத்தின் குரலென சிலரால் விதந்தோதப்படுகிற தலாய் லாமாவிடம் உலக முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்தன, எனினும் அதனால் எந்தப்பலனும் இல்லை. ஜனநாயகம் மற்றும் சமாதானத்தின் தூதுவராக முன்னிறுத்தப்படும் ஆங் சான் சூகீ, ஒரு பேட்டியில் ரோஹிங்ய மக்கள் பர்மியர்களா என்றுகூடத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை  இம்மக்கள் பர்மாவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் தானே தவிர பர்மிய குடிமக்கள் அல்லர். ஒருவேளை அவர்கள் பர்மியர்கள் என்றால் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது மிகவும் விஷமத்தனமானது.

காக்சான் பகுதியில் ஐ.நா. சபை நடத்தும் அகதி முகாமில் 30,000க்கு  மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான பரிதாபம் பங்களாதேஷில் இருக்கின்றபோதும் ஏற்கனவே ஏழ்மையும் மக்கள்தொகை நெருக்கடி மிகுந்த இடமாகவும் அது இருப்பதால் இதுவரை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு தனது நாட்டின் கதவுகளைத் திறக்க மறுக்கிறது. ஒரு வேளை பங்களாதேஷ் கதவைத் திறந்துவிடுமானால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புத்தமத வெறியர்கள் பர்மாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அடித்து பங்களாதேஷிற்கு விரட்டிவிடுவார்கள் என அது அஞ்சுகிறது. 1992முதல் காக்சான் பகுதியில் அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிற எல்லையில்லா மருத்துவர் குழு, ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான தடையை பங்களாதேஷ் உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. தடை நீடிக்குமானால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் உயிர் காக்கும் மருத்துவ உதவியின்றி மடிய நேரிடும் எனவும் கூறியுள்ளது.

புதுடெல்லியிலுள்ள மியன்மார் தூதரகத்திற்கு எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒரு சிறு போராட்டத்தை நடத்தியுள்ளன. உலகில் தொடர்ந்து அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மைச்சமூகங்களில் ஒன்றாக ரோஹிங்ய முஸ்லிம்கள் இருக்கின்றனர் என அப்போது இவர்கள் கூறியிருக்கின்றனர். 

இந்தியாவின் கடைசி முகலாய அரசான  இரண்டாம் பகதுர்ஷா மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டு 1862ல் அங்கேயே சிறையில் இறந்தும் போனார். இந்தி யாவிலிருந்து சென்ற முஸ்லிம்களில் அதிகமானோர் ரங்கூனில் வாழ்கின்றனர். இவர்களும் இதர பர்மிய முஸ்லிம்களும் சேர்ந்து பர்மிய மக்கள்தொகையில்  4%.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான இனக்கலவரங்கள் வெடித்துள்ளன. இந்தியர்களையும் முஸ்லிம்களையும் வந்தேறிகளாக கருதி வெறுக்கும் போக்கு இருந்துவந்துள்ளது. 1938லேயே பர்மா பர்மியர்களுக்கே எனும் கோஷத்துடன் முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த வன்முறை போராட்டத்தை முறியடிக்க அன்றைய இந்திய காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் மூன்று புத்தபிக்குகள் காயமடைந்தனர். இந்தப் படங்களை பர்மிய செய்தித்தாள்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரம் பர்மா முழுக்க வெடித்தது. முஸ்லிம்களின் உடைமைகளும், வீடுகளும், 113 மசூதிகளும் சூறையாடப்பட்டன. இதைத் தொடர்ந்து 1938 செப் 28ல் பிரிட்டிஷ் கவர்னர் அமைத்த ஒரு விசாரணைக்கமிசன்,  பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளே இக்கலவரத்திற்கு காரணம் எனக் கூறி யது. எல்லா சிறுபான்மையினருக்கும் முழுக்குடியுரிமை வழங்கவேண்டும் என்று இதற்குப்பின் வந்த சைமன் கமிசன் கூறியது. சுதந்திரமான வழிபாட்டுரிமை, சொத்து ரிமை, பொது வருவாயிலிருந்து பள்ளிகளை நடத்தக் கூடிய உரிமை, இந்தியாவிலிருந்து தனிநாடாக பர்மிய சுயாட்சி ஆகியவை இருக்கவேண்டுமெனவும் சைமன் குழு பரிந்துரைத்தது.

1948ஆம் ஆண்டு சுதந்திர பர்மாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற யு-நு (yu-nu), 1956ல் புத்த மதத்தை பர்மிய அரசின் மதமாக அறிவித்தார். மதச்சார்பற்ற, எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவான ஒரு தேசம் என்கிற பர்மிய அரசியல் சாசன வரையறுப்புக்கு விரோதமான இவ்வறிவிப்பு  சிறுபான்மையினரை கோபம் கொள்ளச் செய்தது. 1962ல் முஸ்லிம்களின் நிலை மேலும் மோசமடைந்தது. அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பது போன்ற வாதங்கள் வலுப்பெற்றன. கருப்பர் (கலா) என்று பர்மிய முஸ்லிம்களை இனத்துவேஷத்துடன் குறிக்கும் போக்கும் வலுப்பெற்றது. 1997ம் ஆண்டு ஒரு முஸ்லிம் ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டி 1000 புத்தபிக்குகள் மசூதிகளையும், கடைகளையும், வாகனங்களையும் சூறையாடினர். இதையொட்டி மாண்டலேவில் மூன்றுபேர் இறந்தனர், 100 புத்தபிக்குகள் கைது செய்யப்பட்டனர்.

2001ம் ஆண்டு சிட்வே (sittwe) பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும் புத்தமதத்தவர்க்கும் இடையே மோதல் நிலை உருவானது. இளந்துறவிகள் 7 பேர் கேக் தின்றுவிட்டு முஸ்லிம் கடைக்காரருக்கு காசு கொடுக்கவில்லை என்றும், கடைக்காரரான முஸ்லிம் பெண்மணி ஒரு துறவியை அடித்துவிட்டார் என்றும் இதைத் தொடர்ந்து மற்ற புத்தத்துறவிகள் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறி பெரும் கலவரம் வெடித்தது. புத்தத் துறவிகள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். 2001ம் ஆண்டு "நம் இனம் அழிந்து காணாமல் போகும்" என்பது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் புத்தபிக்குகளால் விரிவாக விநியோகிக்கப்பட்டன. 2001 கலவரத்தின் போது கலவரக்காரர்கள் செல்போன் வைத்திருந்ததாகவும், எனவே அரசுத்தலையீடு இல்லாமல் இது சாத்தியமில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் பாமியன் பகுதியில் புத்தர் சிலை உடைப்பு நடந்ததையொட்டி பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை மேலும் மோசமாகியது. பாமியானில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக டாங்கு (toungoo) பகுதியிலுள்ள ஹந்த (Hantha) மசூதி இடிக்கப்படவேண்டுமென புத்தபிக்குகள் சொல்லத் துவங்கினர். இவர்கள் தலைமையில் 11 மசூதிகள்  இடிக்கப்பட்டன, 400 முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப் பட்டன, 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். டாங்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2001 மே 18,  ஹந்த மசூதியும் டாங்கு ரயில்நிலைய மசூதியும் இடிக்கப்பட்டன. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ரோஹிங்ய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு ஐ.நா. அகதி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென அதிபர் தீன் சென் 2012 ஜூனில் கூறியதைத் தொடர்ந்து தற்போது ரக்கயன் பகுதிகளில் இன்னொரு இனப்படுகொலை துவங்கியுள்ளது. 

பல்வேறு பர்மிய அரசியல் அமைப்புகளுக்குள் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பகைமை தலை தூக்கியுள்ளது. இந்த பாசிஸ்ட் கலவரம் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. முஸ்லிம் தரப்பு ஏதாவதொரு சிறு தவறு செய்யும்வரை காத்திருந்து அத்தவறைப் பயன்படுத்தி அந்தப்பகுதியிலுள்ள முஸ்லிம்களை விரட்டியடிக்கும் தந்திரம் கையாளப்படுகிறது. ரக்கயன் (Rakhine) புத்தபிக்குகளே இக்கலவரத்தைத் துவக்கியதாக ரோஹிங்கிய முஸ்லிம்களும், ரோஹிங்கிய முஸ்லிம்களே இதற்கு காரணம் என ரக்கயன்களும் மாறிமாறி குற்றம்சாட்டுகிறார்கள். பர்மிய உளவுத்துறையின் பல ஏஜெண்டுகள் புத்தபிக்குகளாக உள்ளனர் என்றும் இவர்களே இக்கலவரத்திற்கு தலைமையேற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் புத்தபிக்குகளுக்கும், வன்முறையை விரும்பாத புத்தபிக்குகளுக்கும் இடையே ஒரு பிளவு உள்ளதாகவும் தெரிகிறது. 

மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போதைய கலவரம் பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை 30.07.2012 அன்று வெளியிட்டுள்ளது.  ஐ.நா.சபைக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, 2012 மே 28 அன்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை  வன்புணர்ச்சி செய்ததாகவும் அதற்கு பதிலடியாக 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், அதையொட்டி புத்தமதத்தை பின்பற்றுபவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் மூண்டதாகவும், இதில் இருதரப்பினரும்  சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் அல்ல என்றும், இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 77 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் போலியானவை என்றும், கலவரத்தில் அரசின் ஈடுபாடு உள்ளது எனும் வாதம் பொய்  என்றும்  கூறப்பட்டுள்ளது.

எந்தக் கொலையாளியும் உண்மையை ஒப்புக்கொள்வதில்லைதானே? சேனல் 4 வீடியோக்காட்சிகள் போலியானவை என்று ராஜபக்ஷே கும்பல் வாதாடவில்லையா? பெண்போலிசை மானபங்கத்திலிருந்து காப்பாற்றவே தாமிரபரணியிலும் பரமக்குடியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியதாகிவிட்டது என்று தமிழ்நாட்டு போலிஸ் தலித்துகள் மீது பழிபோடவில்லையா? பர்மா அரசும் அப்படித்தான், முஸ்லிம்களை காமுகர்களாக சித்தரித்துக் காட்டி தனது இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் இனஅழிப்புக் கலவரங்களையும் கொலைகளையும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

சர்வதேச சமூகத்தின் முன்னே வைக்கப்படும் மேற்சொன்ன அறிக்கையில், மியான்மர் பன்முக கலாச் சாரமும் வேறுபட்ட வழிபாட்டு முறைகளும் பல்வேறு மதநம்பிக்கைகளும் கொண்ட இனங்கள் ஒன்றுபட்டு வாழும் நாடு என்று பீற்றிக்கொண்டாலும் ரோஹியாங் முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கிடும் அரசின் இழி முயற்சி ஓயவில்லை.

பத்திரிகையாளர்களுக்கு கலவரப்பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும், எல்லா தகவல் தொடர்பாளர்களுக்கான வழியும் அடைக்கப்பட்டுள்ளதாலும் நிலைமையை உறுதி செய்துகொள்ள இயலாத நிலை இருக்கிறது. இதைப்பற்றி  அல்ஜஸிர (aljazeera), அரபு நியூஸ் (Arabnews),, ரடியாண்ட்ஸ்விக்கி (Radiantswiki)  போன்ற பத்திரிகைகளின் இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளும் செய்திகளும் நம் காலத்திலேயே நமக்கு மிக அருகாக இன்னொரு இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது என்ற திகிலூட்டும் உண்மையைத் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்ற கார்ப்பரேட் ஊடகங்கள் கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் தானே என்று பாராமுகமாகவே இருக்கின்றன. நாமும் மௌனம் மட்டுமே காப்போமானால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர்க்குற்றத்திற்கும் இனவழிப்புக்கும்  துணைபோவதன்றி வேறல்ல என்பதை இலங்கையின் வரலாறு நமக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.



Sunday, August 27, 2017

நேர்காணல் : அருந்ததி ராய் எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?

எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் அறியப்படும் அருந்ததிராய் அவர்களின் மனம்திறந்த பேட்டி எல் (ELLE)  என்ற ஃபேஷன் இதழில் வெளிவந்திருக்கிறது. காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் மூலம் உலகப்புகழ் பெற்றிருந்த அருந்ததிராய், ஃப்ராஸ்ட் கவிதையின் 'குறைவான பேர் பயணித்த சாலையை' விரும்பி தேர்ந்தெடுத்தார். மாவோயிஸ்ட்களுடனும், பழங் குடி மக்களுடன் காடுகளில் நடந்தார். ஒரு வழக்கமான இலக்கியவாதியின் தந்திரத்தைக் கொள்ளாமல் அரசை விமர்சித்தார். அவருடைய தீவிரமான நிலைப்பாடுகளும், காத்திரமான விமர்சனங்களும் அரசை நிலைகுலையச் செய்தன. வழக்குகள், கைது, மிரட்டல், தாக்குதல், அவதூறு என்று சோதனைக்குள்ளானார். அதேநேரத்தில் இவை தவிர்க்கவியலாமல் இந்திய இடதுசாரி தரப்பின் முக்கிய ஆளுமையாக அவரை உயர்த்தியது. அருந்ததி ராயின் தனித்துவமான தனிவாழ்வு பேரவா ஏற்படுத்தும் ஒன்று. இப்பேட்டியின் பெரும்பகுதி அதைச் சுற்றியே சுழல்கிறது. தனதுதாய், சகோதரர், கணவர், குழந்தைகள், தோழிகள், பிடித்த எழுத்தாளர்கள், புதிய நாவல், விரும்பும் உடைகள், உடற்பயிற்சியக அனுபவங்கள் குறித்த தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்திருக்கிறார். என்ன பேச நினைத்தாலும் அது அரசியலாகவே திமிறுகிறது. இந்த வித்தியாசமான பேட்டியை எல் இதழ் சார்பாக ஐஸ்வர்யா சுப்ரமணியம்  எடுத்திருக்கிறார்.  தமிழில்: ராஜ்தேவ்

***
எல் இதழின் அட்டைப்படத்தில் நீங்கள் எப்படி?

அது நரையின் செருக்கு! எல்லின் அட்டையில் பெண்கள் வருவதற்கான நேரம் வாய்த்திருக்கிறது. கண்ணாடி செருப்புகளை அணிந்துகொண்டு மிடுக்காக சுற்றிவரும் சின்ட்ரல்லாவின் தீய மூத்த சகோதரிகள் வெளிச்சத்துக்கு வரும்நேரம்வந்துவிட்டது. ஏன் குறிப்பாக எல்? ஏனெனில் கருப்புநிற பெண்களை யெல்லின் அட்டைப் படங்களில் பார்த்துள்ளேன். நான் அதை விரும்பினேன். நான் ஒரு கருப்புநிற பெண். நம்மில் பலரும் அந்த நிறம் தான். தொண்ணூறு சதவீதம் கருப்பு நிறமே. வெள்ளை நிறம் மீதும், நேர்முடி மீதும் இந்தியர்களுக்கு இருக்கும் பற்று என்னை வாட்டும் ஒன்று. நமக்கு ஒரு புதிய அழகியல் தேவைப்படுகிறது. எல் அதற்கு முயற்சிப்பதை பார்க்கிறேன். அது விந்தையானது. நான் அந்த நோக்கத்தை உயர்த்திப் பிடிக்க இங்கு வந்துள்ளேன்.

இது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனால், மற்றவர்கள் உங்களை எப்படி பார்ப்பார்கள், உங்கள் நம்பகத் தன்மை போன்றவற்றை மோசமாக மதிப்பிடமாட்டார்களா?

ஓ! எனது நம்பகத்தன்மை முதலியவை. ஆமாம் ஆமாம். ஆனால் நான் விமர்சனங்களை எதிர்கொள்ள துணிந்து விட்டேன். அச்சுறுத்தக்கூடிய, நரைத்த தலைமுடி உடைய வயதான பெண்மணிக்குள், பரவசம் நிறைந்த கறுத்த தலைமயிர் கொண்ட 22 வயதின் வேட்கை ஒன்று வெளிவரத் துடிப்பதை நான் இந்த உலகுக்கு தெரியப்படுத்த விழைகிறேன்.

எனக்கு தெரிந்ததுதான் அது. ஸ்நோடெனுடன் உங்கள் சந்திப்பை முன்வைத்து ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’(Things That Can And Cannot Be Said)  என்ற தலைப்பில் இப்போது ஒரு புத்தகம் உங்களிடமிருந்து அடுத்தமாதம் (ஜூலையில்)  வெளிவர இருக்கிறதே.

அது ஒரு சிறிய புத்தகம். ஜான் கசாக்குடன் இணைந்து எழுதியது. ஸ்நோடெனை ரஷ்யா சென்று சந்திக்கும் ஆலோசனையை ஜான் கசாக்தான் வழங்கினார். பல வகைகளில் ஸ்நோடென் தனித்துவமானவர். முழுமை யான வாக்கியங்களுடன் மிகவும் தொடர்ச்சியாக பேசக் கூடிய சிலரை மட்டுமே பார்த்துள்ளேன். ஒரு புஷ் ஆதரவாளராக வலதுசாரி முகாமிலிருந்து, இராக் போருக்கு ஆதரவாக கையெழுத்தும் இட்டிருந்த அவர் இன்று வந்திருக்கும் இடம்- திகைக்க வைக்கும் ஒரு பயணம். நாங்கள் இரண்டு நாட்களை முழுமையாக அவருடன் கழித்தோம். ஜான் கசாக், டேனியல் எல்ஸ்பெர்க் மற்றும் நான். பென்டெகன் தொடர்பான தகவல்களை கசிய செய்து டேனியல் 60களின் ஸ்நோடென் என்று பெயர் பெற்றவர். அது ஒரு வசீகரிக்கும், நெகிழ்ச்சியான உரையாடல்.

ஏதாவது பதிவு செய்ய முடிந்ததா?

ஸ்நோடென் எங்களை பதிவு செய்ய அனுமதித்தார். பின்னர் அவற்றை எழுத்துப்பூர்வமாக வடித்து, தொகுத்து அனுப்பியபோது அதனை அவர் பதிப்பிக்க விரும்ப வில்லை. பரிகாசம் மற்றும் கேலிமிகுந்து இருந்தது கூட காரணமாக இருக்கலாம். அவருடைய நிலை மிகவும் கடினமானது. எனவே அவர் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அதுவல்ல அந்த உரையாடலின் தன்மை. அது கொஞ்சமும் மதிப்பு பெறவில்லை. ஆனால், துர திருஷ்டவசமாக, ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’ நூல் ஸ்நோடெனின் நேர்ச்சொல்லாக எதையும் கொண்டிருக்கவில்லை. அது மிகவும் சங்கடமானது. இணையம், கண்காணிப்பு மற்றும் அதை நடை முறைப்படுத்தும் முறை போன்று அவர் நன்கறிந்த வற்றை சொல்லும் போது நம்மை வாய்பிளக்கச் செய்யும் அளவுக்கு அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார். கேலி மற்றும் நையாண்டிக்கு அப்பால் அந்த நூல் தேசியம், ஏகாதிபத்தியம், போர், முதலாளித்துவம், கார்ப்பரேட் உதவி மற்றும் கம்யூனிசத்தின் தோல்வி போன்ற தீவிர மான பிரச்சினைகள் பற்றிய எண்ண அலைகள் எனலாம். நூலின் இறுதிப்பாகம் மிகவும் அதிர்ச்சிகரமானது. அணு ஆயுதப்போட்டியில் அமெரிக்க அரசு ஈடுபடுவது பொய் தகவல்களின் அடிப்படையில் என்றார் எல்ஸ்பெர்க்.

நீங்கள் ஒழுங்குமுறையை கடைபிடிக்கும் ஓர் எழுத்தாளரா?

நான் கொஞ்சம் ஒழுங்குமுறையை கடைபிடிப்பேன். இப்போது மிகக்கடுமையாகக் கடைபிடிக்கிறேன். ஏனெனில் ஒரு புதிய புத்தகத்தை எழுதிவருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் எனது மேசையில் எழுதி வருகிறேன். சிலநேரங்களில், நாள்போவதே தெரியாமல் இருந்திருக்கிறேன். திடீரென சுற்றிப் பார்க்கும்போது இருண்டிருக்கும். கணினித்திரையில் இருந்து மட்டுமே வெளிச்சம் வந்துகொண்டிருக்கும். கடந்தவாரம் வேக வைக்க நினைத்த முட்டையை இரும்புச்சட்டியில் கருகவிட்டு விட்டேன். சமையலறையில் புகை சூழ்ந்தது. இந்த வாரம் மறுபடியும் முட்டை கருகிவிடுமோ என்று பயந்துபோய் ஓடிச்சென்று தீயை அணைத்தபோது தான் தெரிந்தது இரும்புச்சட்டியில் முட்டை இல்லை என்று. கொஞ்சம் பைத்தியம் பிடித்தது போன்றுதான்.

புதிய நாவல்! நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். எப்போது வெளிவருகிறது?

அடுத்த வருடம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். 

சின்ன விசயங்களின் கடவுள் வெளியாகி இருபது வருடங் கள் கழித்து புதிய நாவல் வெளிவருகிறது. எதிர்பார்ப்புக்குரியதாக என்ன இருக்கிறது?

என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது சின்ன விசயங்களின் கடவுள் II.

ஏன் இப்போது எழுதத் தீர்மானித்தீர்கள்?

நான் முடிவு செய்யவில்லை, அது முடிவு செய்துகொண்டது. சிலவருடங்களாகவே அதனை சுற்றி நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன். புனைவு என்று வரும்போது நான் அவசரப்படுவதில்லை. கடந்த 20 வருடங்களாக நான் அதிகமான பயணத்தையும், எழுத்தையும் மேற்கொண்டி ருக்கிறேன். அவை ஒரு பாறையாக என்னுள் படிந்துள்ளதை உணர்கிறேன். உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புரிதல்கள் பல அடுக்குகளாக படிந்துள்ளன. அவற்றை புனைவாக அல்லாமல் வேறு எப்படியும் கூறிட இயலாது. நீங்கள் அங்கே அமரவேண்டும். பல அடுக்குகள் கொண்ட அந்த அனுபவம் அவிழ்ந்து உங்கள் மரபுப் பொருளின் ஒரு பகுதியாக மாறவேண்டும். பின்னர் அது உரைநடையாக வியர்த்து வெளியேற வேண்டும்.

உங்கள் புனைவு சுயவரலாற்றுத்தன்மை கொண்டதா?

சுயவரலாறு என்று எதை சொல்கிறீர்கள்? எது எதார்த்த வகைப்பட்டதாகும்? நீங்கள் கற்பனை செய்துகொள்ளும் ஒன்று சுயவரலாறு ஆகுமா? உங்கள் கற்பனையில் நீங்கள் அனுபவத்த ஒன்று? உங்கள் கற்பனையில் இன் னொருவரின் வலியையோ, மகிழ்ச்சியையோ உணர்வது சுய வரலாறா? எனக்கு தெரியவில்லை. அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவம் பற்றி பெரும் விவாதம் நடந்தி ருக்கும் நிலையில் இது மிகப்பெரிய கேள்வியாகவும், ஒரு புனைவெழுத்தாளருக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

நீங்கள் எழுதும் முறை என்ன?

நான் அதைப்பற்றி பேசமுயன்றால், என்னுடைய பேச்சு சிறிது தொடர்பற்றதாகிவிடுகிறது. ஏனெனில், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று என்னால் முழு மையாக உணரமுடியவில்லை. என்னுடைய கதையாடல் கட்டவிழ்கின்ற முறை எனக்கு மிக முக்கியமானது. இதோ என்னிடம் ஒரு வசீகரக் கதை இருக்கிறது. நான் அதை சொல்லப்போகிறேன் என்பதை போன்றல்ல. நான் அதுபோன்று எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, என்னால் அதை ஒரு கோட்பாட்டுக்குள் கொண்டுவர இயலாது. நான் அதை புரிந்துகொள்ளவும், விளக்கவும் சிரமப்படுவேன். நான் உட்கார்ந்து எழுதுவது மிக முக்கியம் என்று சொல்வேன். மேலும் அது புத்தகமாக எப்போதுமே  அங்கு இருக்கி றது என்று சொல்வேன். உங்களுக்கு தெரியுமா? உங்கள் மண்டைக்குள் இசை ஓடுவதைப் போன்று. ஏதாவது ஒருவகையில் அதுபற்றி சிந்திக்காத ஒரு பொழுதில்லை. அது அங்கு இல்லாத ஒரு நொடிப்பொழுதும் இல்லை. அது ஒருவகையான ஆட்கொள்ளல் என நினைக்கிறேன்.

இது ஒருவகை ஆட்கொள்ளல் போலுள்ளதே.

நீங்கள் ஒரு கதையை உடமையாக்குவதல்ல; உங்களை ஒரு கதை உடமையாக்குவதை உணரவேண்டும். பின்னர் அது எப்படி சொல்லப்பட வேண்டுமென்று அது சொல்ல நீங்கள் காத்திருக்கவேண்டும். அது என்னுடைய அனைத்து அறிதிறன்களுடனும் உறவாடும். நான் அதை தடுக்காமல் நன்றியுடன் இருப்பேன். அது மிக அழகா னது. அது நீங்கள் ஏதோ அற்புதமான ஒன்றை செய்கி றீர்கள் என்று பொருளில்லை. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், ஏதோவொன்று வாழ்க்கையில் உங்களை முழுமையாக ஆட்கொள்ளும். அது ஒரு கொடை. இந்த உலகில் புனைவு எழுதுவதை போன்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், ஆட்கொள்ளும், வருத்தும் ஒன்று வேறெதுவும் இல்லை. ஆனால், பெரும்பாலான நேரம் நான் உணர்வது என்னவென்றால், என்னுடைய பணி என்பது கவனம் குவித்து புத்தகம் தன்னை எழுத விடுவதுதான்.

கட்டுரைகள் பற்றி?

எனது கட்டுரைகள் ஒரு அவசரத்தன்மையுடனும், சிறிது கோபத்துடனும் எழுதப்படுபவை. ஒவ்வொரு முறை அரசியல் கட்டுரை எழுதும்போதும், இன்னொரு கட்டுரை நான் எழுதமாட்டேன் என்று நான் சொல்லிக் கொள்வேன்.

பிறகு இன்னொன்றை எழுதிவிடுவீர்கள்.

ஆம். அது எப்படியென்றால், வேறொருவர் அதைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். உங்களுக்கு தெரியுமா? ஆனாலும் நான் எழுதுவதற்கு காரணம், என்னால் அதைக் கட்டுப்படுத்த இயலாததை உணர்வதால்தான். நான் அதை எழுதத் துவங்கிவிட்டால், நாளொன்றிற்கு 20 மணிநேரம் வெறித்தனமான ஈடுபாட்டுடன் எழுதுவேன்.

நீங்கள் 17 வயதில் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளீர்கள். அம்மாவுடன் ஏதும் பிரச்சினையா?

என்னால் வீட்டில் வாழமுடியவில்லை. அது பெரும் மனவேதனையாக அப்போதிருந்தது. ஆனால், வீட்டை விட்டு வெளியேறியதை பல வழிகளில் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எனது தாய்தான் எனது ஆக்கச்சக்தியும், அழிப்புச்சக்தியுமாக இருந்தார். அவர் முன்னிலையில் நான் நொறுக்கப்பட்ட ஒரு ஈரல். அவர் ஓர் அழகான பள்ளியைத் துவக்கினார். அதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வந் தார். பல தலைமுறைகளாக இது நடந்துகொண்டிருக்கி றது. அவர் அவராக இருப்பதை மெச்சுகிறேன். அதே நேரத்தில் அந்த உணர்ச்சியில் நான் கருகிப் போய்விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இரு அணுஆயுதச் சக்திகள். மிக அருகாமை யில் நாங்கள் நீண்டநாட்களுக்கு இருக்க முடியாது.

இப்போது அவருடன் உங்களுக்கு ஒட்டுறவு இருக்கிறதா?

நாங்கள் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதனை மதித்து நடக்கிறோம். ஆனால், ஒரு போர் ஏற்பட்டுவிட்டால், நான் தெளிவாகவும், ஐயத்துக்கு இடமின்றியும் சொல்லிவிடுகிறேன்- எனது தாய் தான் வெற்றி பெறவேண்டும். நான் அவரை தோற்கடிக்க விரும்பவில்லை.

இது ஒரு விசேடமான உறவாக தெரிகிறதே.

உண்மைதான். ஆனால் எந்தக் கோணத்திலிருந்து பார்த் தாலும் அது அழகற்ற ஒன்று. இப்படி சொல்லலாம். நேர் திசை என்றாலும், எதிர்திசை என்றாலும் அல்லது, வாய்ப்புள்ள எந்த வழியாக இருந்தாலும் நான் இருப்ப தன் மையம் அம்மாதான். அவள் விசேடமான பெண். மணி. பெண்களுக்கு இருக்கும் எந்த தாய்மைக்குணமும் அவருக்கு இருந்ததில்லை. ஒருவேளை தாய்மைக்குணம் இல்லாதது தான் நான் வியக்க காரணமா என்றும் தெரிய வில்லை. அல்லது சிலநேரங்களில் ‘கொஞ்சம் விநோதம் குறைவாக இருக்கக்கூடாதா?' என்று நினைத்துக்கொள் வேன். ஆனால், இல்லை, இல்லை. அது உண்மை இல்லை.

வேறு என்ன வகையான பண்புநலன்கள்?

ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து ‘நான் வெளியே சென்றிருந்தபோது, என்னை அருந்ததி ராயின் அம்மாவா என்று கேட்டார்கள். கன்னத்தில் அறைந்தது போன்று உணர்ந்தேன்!' என்றார். எனது பாதி மனநிலை சிரித்துக்கொண்டது. மீதி பாதி, ‘அப்படி கேட்டது என்ன ரொம்ப தப்பா?' என்று சொல்லிக்கொண்டது.

ஆ! அம்மாக்கள்.

அம்மா நீண்டகாலமாகவே உடல்நிலை சரியில்லாதவர். கடும் ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டவர். ஆஸ்துமா  உள்ளவர்களின் இயக்கத்தை மூச்சுதான் கட்டுப்படுத்தும். அதுபோல தான் என்னையும் அவரது மூச்சு கட்டுப்படுத் தியது. அம்மா இறந்துவிடுவாரோ என்ற அச்சத்துடனே வளர்ந்தேன். ஒவ்வொரு மூச்சிலும் அவர் அனுபவிக்கும் வலியையும், மீட்சியையும் கண்ணுற்றேன். பலநாட்கள் அம்மாவுடன் மருத்துவமனையில் எனது நேரம் கழிந் தது. சிலமாதங்களுக்கு முன்னர் அவர் நோய்வாய்ப்பட் டார். காற்றூட்டக் கருவி பொருத்தும் அளவுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இப்போது மீண்டெழுந்து மறுபடியும் தனது வேலைகளில் மும்முரமாக உள்ளார். அவர் ஆட்சிப்பகுதி மறுபடியும் அவர் கைகளுக்கு வந்துள்ளது. அடிப்படையில் அவர் ஒரு ஹூடினி- தப்பிக்கும் கலைஞர். எனது அம்மாவைப் பற்றி சொல்ல ஒரு புத்தகம் தேவைப்படும். என்னால் மட்டுமே எழுத முடியும். அது வேறெவராலும் முடியாது.

நான் அதை படிக்க விரும்புகிறேன். உங்களை பாதித்த வேறு பெண்கள் யார்?

என் அம்மா என் அப்பாவை விட்டு பிரிந்தபோது அசாமி லிருந்து ஊட்டிக்கு வந்தார். அப்போது பணமில்லாம லும் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். எழுந்திருக்க இயலா மல் படுக்கையிலே சும்மா படுத்துக் கிடப்பார். வீட்டில் நான் மற்றும் சகோதரருடன் மூன்று அல்லது நான்கு பேர் உண்டு. எங்களை கடைவீதிக்கு ஒரு கூடையுடனும் ஒரு குறிப்புடனும் அனுப்புவார். அந்த குறிப்பை படித்து விட்டு கடைக்காரர்கள் பொருள்கள் மற்றும் காய்கறி களை கூடையில் போடுவார்கள். அதன் பிறகு குருசம் மாள் என்ற பெண் எங்களுடன் இணைந்தார். அவர் எங் களை கவனித்துக்கொண்டார். அவர் எங்கிருந்து வந்தார் என்று எனக்குத் தெரியாது. அதன்பிறகு நான்கு வருட காலம் அம்மாவுடனே அவர் இருந்தார். சமீபத்தில் அவரை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் கட்டிப் பிடித்து கூக்குரலிட்டோம். ஒரு தாயின் ‘வழக்கமான' அனைத்து பணிவிடைகளையும் எனக்குச் செய்தவர். நான் அவரை காதலித்தேன். சில நாட்களுக்கு முன்பு மரணித்தார். 96 வயது. அவரைப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் சகோதரருடன் நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தீர்களா?

ஆம். நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள். அவர் கொச்சியில் வாழ்கிறார். கடலுணவு சார்ந்த தொழில் அவருடையது. இறால் தரகர் அவர். எனக்கு இறால் பிடிக்காது. ஒத்துக்காது.

தன்னிறைவு அமைதி கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்பவர் நீங்கள், இல்லையா? அது தனிமையுணர்ச்சியை கொண்டு வராதா?

தனித்து வாழும் மிக அற்புதமான மற்றும் விசித்திரமான ஒரு சமூகத்தின் பகுதியானவள் நான். தனிமையுணர்ச்சி என்று அதனை புரிந்துகொள்ளக்கூடாது. எனக்கு ஆழ மான மற்றும் நீடித்த நட்புகள் உள்ளன. இந்த பூமியின் கடைசி முனைவரை ஒருவர் மற்றவருக்காக இணைந்து நடக்கத் தயாராக இருப்பவர்கள். எனவே ஆம், நான் தனியே வாழ்பவள். ஆனால் என் வாழ்வு முழுமையான அன்பால் நிறைந்து இருப்பது. எனது முன்னாள் கணவர் பிரதீப் மற்றும் தங்கள் தாயை மிகச்சிறுவயதிலே இழந்த எனது குழந்தைகள் மித்வா மற்றும் பையா ஆகியோரு டனான உறவு விந்தையானது. நான் தனியே வாழ்வதன் காரணம் மற்றவர்களின் மீது எனது தனிப்போக்குகளை சுமத்தக்கூடாது என்பதற்காகத்தான். மட்டுமின்றி, நான் எழுதுவதால் ஏற்படும் விளைவுகளை - அவ்வப்போது அவை மிக மோசமானவை- மற்றவர்கள் அனுபவிப்ப திலும் எனக்கு விருப்பமில்லை. நான் தனியே வாழ விரும்பவில்லை என்றால், நான் வாழமாட்டேன். எந்த குறையும் இல்லாததாக... 

குறை இல்லாததாக...? அந்த வாக்கியத்தை முடியுங்கள்.

ஓ, ஹா! ஹா! 

ஏன் போராடுகிறீர்கள்?

நாம் இப்படி சொல்வோம். அதிகாரத்தின் பக்கவாட்டில் எளிதாக சாய்பவர்கள் மற்றும் அதனுடன் இயல்பான பகைமை பாராட்டும் மக்கள். இந்த இருபிரிவினரின் மோதல்தான் உலகின் சமநிலையைக் குலைக்கிறது என்று கருதுகிறேன். இந்த கோட்டின் அடிப்படையிலே என்னை நான் நிறுத்துகிறேன். நமது சுதந்திரங்களை உருவாக்க நீண்ட மற்றும் குறிப்பிடத்தக்க பல போர் களை நிறைய பேர் இட்டுள்ளனர். நாம் அந்த வெளி களை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம்? ஏதாவ தொரு இயற்கை சக்தி நமக்கு இந்த சுதந்திரங்களை கொடையளித்ததாக கருதுவது சரியா? இல்லை. அவை ஒவ்வொன்றாக அடையப் பெற்றவை. சில உணர்ச்சியற்ற இளம்பெண்கள் ‘நான் ஒரு பெண்ணியவாதியல்ல' என்று சொல்வதை கேட்கும்போது மிகவும் எரிச்சலுறுகிறேன்.

என்னை சொல்ல வைக்காதீர்கள்.

நான் சொல்வது, என்ன போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அவர்கள் அறிவார்களா? இன்று நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு சுதந்திரமும் பெண்ணியவாதிகள் பல ரால் கிடைத்தவை. இன்றைய நமது நிலைக்காக பெண் கள் பலர் பெருவிலையை கொடுத்திருக்கிறார்கள். நமது பிறவித்திறத்தாலும், திறமையாலும் அவை வரவில்லை. பெண்களின் வாக்குரிமை சம்பந்தப்பட்ட எளிய விசயத்தையே எடுத்துக்கொள்வோம், யார் அதற்கு போராடினார்கள்? பெண் வாக்குரிமைப் போராளிகள் அல்லவா. பெரும் போராட்டமின்றி எந்த சுதந்திரமும் நமக்கு கிடைக்கவில்லை. நீங்கள் பெண்ணியவாதி இல்லையென்றால், திரைச்சீலைக்குள் மறுபடியும் புகுங்கள். அடுக்களைக்குள் சென்று கட்டளைகளை பெறுங்கள். அதை செய்ய நீங்கள் விரும்பவில்லை அல்லவா? அப்படியெனில், பெண்ணியவாதிகளுக்கு நன்றி சொல்லுங்கள்.

மேலும் சுதந்திரங்கள் நிலையற்றவை.

இந்தியாவில் எழும் பெண்விடுதலை வியக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இந்தப் புரட்சிக்கு இணையாக பழமைவாதத்தின் இருளும் உள்ளோட்டத் தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் பெண் களை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வளர்ந்துகொண்டி ருந்தபோது மருத்துவர்களாகவும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களாகவும் இருந்தார்கள். விரும்பிய உடை அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந் தார்கள். இப்போது? நமது ஆபத்துகள் பற்றிய எச்ச ரிக்கை உணர்வு அவசியம். கணநேரத்தில் பல நூற்றாண் டுகளுக்கு பின்னால் நாம் கொண்டு செல்லப்படலாம்.

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் இயல்பான உணர்வெழுச்சி கொண்ட ஒரு எழுத்தா ளர். என்னுடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங் களை எனது பித்தப்பை வேடிக்கை உருவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்று கருதுவேன்.

ஆங். உங்கள் அபுனைவு எழுத்து பற்றி?

என்னுடைய அபுனைவு எழுத்துக்கு வருகின்ற அறிவார்ந்த விமர்சனத்தை சலித்தறிவது எளிதான செயல் இல்லை. பெரும்பாலனவை இணையத்தில் பரவுகின்ற உடனடி முட்டாள்தனங்களும்  வெறிக்கூச்சல்களும் ஆனவை. ஆனால் எனக்கு வேண்டியது கிடைத்துவிடும். அடிக்கடி மக்கள் சொல்வார்கள், ‘அருந்ததிராய் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர்' என்று. வாதங்களுக்கு முகம் கொடுக்க மறுக்கும் தன்மை கொண்டது அது. ‘அருந்ததி ராய் சர்ச்சைக்குரியனவற்றை எழுதுகிறார்' என்பது சரி யான கூற்றாக இருக்கலாம். சர்ச்சை அங்கிருக்கிறது. அணைகள் நல்லதா? அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டுமா? பஸ்தர் முழுவதையும் கார்ப்பரேட்களுக்கு கையளிக்க வேண்டுமா? நான் அவை குறித்து எழுதுகி றேன். அவற்றைச் சீர்தூக்கி மதிப்பிடுகிறேன். பின்னர் ஒரு நிலைப்பாடு எடுக்கிறேன். ஆனால், சர்ச்சைகளை நான் உருவாக்குவதில்லை என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

உங்கள் நூல்களுக்கு வரும் விமர்சனங்களில் ஏதும்  பொருட்படுத்தத் தகுந்ததை பார்த்துள்ளீர்களா?

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று எப்போதுமே நான் இருந்ததில்லை இருக்கவும் முடியாது. இவை விவாதிக்கப்படவேண்டும். அது சரி அல்லது தவறு என் பதாக அல்ல. எனக்கு வருகின்ற விமர்சனத்துக்கு என்னு டைய நூல்கள் பரிணமித்தமுறை சில வழிகளில் உகந்த எதிர்வினையாக இருக்கலாம். ஆனால், எனது பார்வை களை மாற்றிக்கொள்ள நான் உடன்பட்டதில்லை.

நீங்கள் சொல்வதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமா?

நாம் இன்றொரு காலனியாக அல்லாமல் சுதந்திர நாடாக கருதப்படுகிறோம். ஆனால், அம்பேத்கர் 1936ல் சொன் னதை நம்மால் இன்று சொல்லமுடியுமா? ‘இந்துமதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரச்சம் ஏற்படுத்தும் அகன்ற அறை' என்று அவர் அன்று சொன்னதை போன்று இன்று நாம் சொல்லமுடியுமா? அதைச் சொன்னால் என்ன நடக்கும் நமக்கு? நாம் இன்று மிக ஆபத்தான இடத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். நாம் இன்று மிக கவனத்துடனும், முன் ஆலோசனையுடனும் பேசவேண் டியது முக்கியம் என்று கருதுகிறேன். அதேநேரத்தில், நாம் பின் வாங்கக் கூடாது என்பது மிக முக்கியம். நமது எண்ணங்களை நாம் கண்டிப்பாக பேசவேண்டும். இப்போது நேரம் வாய்த்திருக்கிறது. இல்லையெனில், மிகவும் தாமதித்துவிடுவோம்.

ஒரு நாள் சிறைவாசம் எப்படி இருந்தது?

ஞாபகார்த்தமானது அது. என்னுடைய சாகச  உணர்வை யும் கடந்து என் பின்னால் கதவுகள் மூடப்பட்ட போது நடுக்கமூட்டியது. ஒரு குற்றவாளியாக உள்ளே சென் றேன். தோழர்களுடன் இணைந்து சிறைநிரப்பும் போராட்டமல்ல அது. சுதந்திரமும், சிறைவாசமும் இரண்டு தனித்த பிரபஞ்சங்கள். ஒருநாள் சிறை என்பது பெரிய விசயமல்ல. தாங்கள் செய்யாத குற்றத்துக்கு ஆயிரக்கணக்கான பேர் தற்போது சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் ஏழைகள், தலித்கள், முஸ்லிம்கள் மற்றும் மிக முக்கியமாக ஆதிவாசிகள். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக போரை ஏவியிருக்கும் நாடு நம்முடையது.

நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? நான் ஒரு கை பார்ப்பதுண்டு.

நான் மாட்டிறைச்சி, பன்றிக்கறி ஆகியவற்றை உண்பேன். நமது நாட்டில் இப்போது தலையெடுக்கும் உணவு பாசிஸம் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

தினமும் உடற்பயிற்சிக்கூடம் செல்வீர்களா?

ஆம். தினமும் செல்வேன்.
ஒவ்வொரு நாளும்?

ஒவ்வொரு நாளும் தான்.

பாருங்கள். இது எனக்கு ஒரு அன்னிய கருத்தாக்கமாக படுகிறது.

நன்று. ஒரு பழக்க அடிமையின் மரபுக்கூறுகள் உள்ளவள் நான். என்னுடைய தந்தை ஒரு குடிகாரர், தெரியுமா. ஒரு விஸ்கி குப்பியை அவருடையை கல்லறையின் மேல் வைத்துவிட்டு கவனியுங்கள். நல்லூழாக அவரு டைய பழக்க அடிமைத்தனத்தின் மரபணு என்னுள் தங்கிக்கொண்டது.

உடற்பயிற்சி சம்பந்தமாக நீங்கள் எப்பவுமே இப்படித்தானா?

எனது குழந்தைப்பருவம் தொந்தரவான ஒன்றாக இருந்ததே தவிர துயரார்ந்ததாக இல்லை. நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஓடிக்கொண்ட சமாளித்தேன். வீட்டைச் சுற்றி, பள்ளி மைதானத்தைச் சுற்றி... நான் சமீபத்தில் என்னுடைய பழைய உடற்பயிற்சி ஆசிரியர் திரு.செல்வபாக்கியத்தை சந்தித்தேன். அவர் பையன் களுக்கு மட்டும்தான் பயிற்சி கொடுப்பார். ஆனால், நான் அவருடனே எப்போதும் திரிந்ததால் எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார். நானொன்றும் நட்சத்திர விளை யாட்டு வீரர் இல்லை. உடற்பயிற்சியகத்துக்கு நான் என்னை வருத்தச் செல்வதில்லை. தம்மை வருத்தும் எண்ணம் கொண்டு ஒப்படைக்கும் நபர்களை நான் ஐயுறுகிறேன். நான் ஒரு முழுமையான சந்தோசத்துக்காக செல்கிறேன்.

நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை.

இங்கே பாருங்கள், நாங்கள் பழைய வட்டம் ஒன்றின் நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள். அங்கு அவ்வள விற்கு அன்பு உண்டு. என்னுடைய நாள் ஒன்றின் உச்ச நிலை அது. என்னை நிதானமிழக்காமல் தொடரச்செய் வது. காதல், நட்பு, சிரிப்பு மற்றும் வியர்வை நிறைந்த இடம்.

நீங்கள் ஒரு சீருடல் பயிற்சியாளராக இருந்தீர்கள், இல்லையா?

ஆம். மனமுடைந்திருந்த நாட்களில் நான் சீருடல் பயிற்சி யாளராக இருந்தேன். நானும் சுஷ்மா என்ற அழகான பெண்மணியும் பயிற்சியாளர்களாக இருந்தோம். அவர் பளுதூக்கும் வீராங்கனை. அற்புதமான, கட்டுறுதி கொண்டவர். உடற்பயிற்சி உடையில் அங்குள்ள பெண்களைப் பார்க்க இந்த லாலாஜிக்கள் வருவதுண்டு. நாங்கள் அவர்களை சீண்டுவோம். ஒருமுறை ஒருவர் மிகவும் தளர்ச்சியுற்று வீழ்ந்தார். வகுப்பின் கடைசியில் படுத்துக்கிடந்தார். நான் நடுக்கமுற்றேன். அவர் இறந்து விட்டதாகவே கருதினேன். இது அடுத்த நாளின் பத்திரிகையில் எப்படியான செய்திப்பதிவாக இருக்கும் என்பது எனது மனக்கண்ணில் ஓடியது.

ட்விட்டரில் இருக்க வேண்டியவர் நீங்கள். ஏனில்லை?

ஏனெனில் நான் என்னை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உள்ள அனைத்தையும் ஒரு நாவலாக திறக்க முயற்சிக்கிறேன். நான் ஒரு ரகசியமாக இருக்க விரும்புகி றேன். ட்விட்டரில் என்னால் என்னை சிதறடித்துக் கொள்ள முடியாது.

சரி நாம் ஃபேஜன் குறித்து பேசுவோம். நீங்கள் பெரோ மற்றும் ஈகா உடைகளை அதிகம் அணிவீர்கள் அல்லவா?

நான் அவற்றை வெறும் முத்திரையாக கருதுவதில்லை. சின்ன விசயங்களின் கடவுளை என்னிலிருந்து வேறாக கருதாதது போன்று எனக்கு அவை. நான் அவற்றை அனீத் (அரோரா) மற்றும் ரீனா (சிங்)- ஆகவே கருதுகிறேன். அவர்கள் எனது நண்பர்கள். அனீத்தின் உழைப்பை பல்லாண்டுகளாக அறிவேன். பெரோ என்றழைப்பதற்கு முன்பிருந்தே அவரை தெரியும். என்னால் அந்த உடை களை வாங்கும் வசதி வந்த உடனே அவற்றை வாங்கி விட்டேன். அவற்றில் சில 15  வருடங்கள் பழையவை. அவற்றை நான் தொடர்ந்து அணிந்துவருகிறேன். என்னு டைய சிறந்த உடைகளைத் தயாரித்தவர்கள் அனீத்தும், ரீனாவுமே. அவர்கள் இருவரும் நவீனப் பெண்களாக நம்மை மாற்றும் புதிய அழகியலை வடிவமைக்க முயற்சிப்பதாக எண்ணுகிறேன்.
அது அழகாக சொல்வதாக இருக்கிறது.

அது மிக முக்கியமானது. நவீனத்துவத்தை தனித்த பாரம் பரியமிக்க துணியிலும், பாணியிலும் எப்படி கொண்டு வருவீர்கள்? சிறிய கருப்பு உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்பவர்கள் அல்ல நாம் (எனக்கு அப்படி செல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றா லும்). புடவை அணிவதை நான் விரும்புகிறேன் என்றா லும் புடவையையும், சுடிதாரையும் எப்போதும் அணிவதும் விரும்பக்கூடியது அல்ல. எனவே எப்படி நாம் உடை உடுத்துவது? நாம் என்ன அணியவேண்டும்? உடைகள், நான் அணியும் முறையில் அவை கேளிக்கை யாக இருக்கின்றன. மிகுதியான மகிழ்ச்சியை வழங்கு கின்றன. மேலும் அரசியலும் அதிலுள்ளது.

அரசியல் எங்ஙனம்?

நான் கட்டிடக்கலை பயின்று கொண்டிருந்தபோது இந்த கேள்விதான் - மரபு மற்றும் நவீனத்துவத்துக்கு இடையே யான விளையாட்டு- எனது மனதில் எப்போதும் இருந்தது. 

ஒரு நேர்மையான நவீனத்துவ கட்டிடக்கலை இந்த உல கில் எப்படி இருக்கவேண்டும்? என்னுடைய இளமைக் காலங்களில் எனக்கு வேண்டியதெல்லாம் மரபின் பிடியி லிருந்தும் அது எனக்கு வைத்து இருந்ததிலிருந்தும் தப்பிப்பதாக இருந்தது. அதன்பிறகு பிரியமான நவீனத்து வத்தின் விகாரமான பேருருவுக்கு எதிராக வந்தீர்கள். பிறகு அதனிலிருந்தும் திரும்பி பறந்துவிட்டீர்கள். எனவே நான் என்ன அணிகிறேனோ, அது இந்த மாற்றத் தின் கதையை கூறும் என்று கருதுகிறேன். ஒயில் மிக முக்கியமானது. யாரும் இல்லையென்று சொல்ல முடி யாது. ஆம், இது சற்று இனிமையான மிகை. அதை பெறுவது நன்றிக்குரியது. நல்லூழாக நகைநட்டுகள் மீது எனக்கு ஆர்வமில்லை... எனது மொத்த ஆடை அலமாரி யும் ஒரு ஜோடி வைரத்தோடுகளுக்கு இணையாகாது. எனது ஆடைகள் அழகான அனுபவத்தை தருவன. சில இன்ப நுகர்வுகளுக்கு கண்டிப்பான தேவை என் வாழ்வில் இருக்கிறது.

கையில் மிக நீண்டகாலத்துக்கு பணம் ஏதுமில்லாமல், இறுதியில் பணம் வந்து சேர்ந்தது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்ததா?

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உண்மைதான். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள எனது மனதிற்கு நீண்டகாலம் ஆனது. நான் அது குறித்து தீவிர குற்றஉணர்ச்சி அடைந்தேன் . மேலும் மனம் சிக்கலானது.

ஆனால் ஏன்? நீங்கள் சம்பாதித்ததுதானே.

ஆம். ஆனால் அதற்கொரு எல்லை உண்டு. எனக்கு அந்த சிறிய, சந்தோச, வெற்றிகர மற்றும் உவகை உணர்ச்சிகள் இருந்ததில்லை. உங்களுக்குத் தெரியுமா, நான் இன்று உலக அழகி. நான் என்னுடைய தாய் மற்றும் முகவர் மற்றும் இயேசுநாதருக்கு நன்றி சொல்லவிரும்புகிறேன். நீண்டகாலத்துக்கு அது மனப்புணர்ச்சியாக இருந்தது. நான் சிறிது சம்பாதிப்பது தேவையாக இருந்தது. ஆனால், எனக்கு கிடைத்தது... மிக அதிகம். அது நான் கொஞ்சம் கூட கற்பனை செய்துகொள்ளாதது, தெரியுமா? அந்தளவுக்கு புகழ். அந்தளவுக்கு பணம். அதாவது எனது தரத்தின் மூலம் பெற்றது. ஒரு ரூபாய் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போனவருக்கு கிடைத்தவை அவை.

நீங்கள் சிறந்த நாவல் ஒன்றை எழுதினீர்கள்.

புக்கர் விருது கிடைத்தபோது நான் கிளர்ச்சியுற்றேன். ஆம், அதுதான் உண்மை. ஆனால், இந்த விருது எனக்கு கிடைத்த நாளின் இரவில் நான் விநோதமான கனவு ஒன்றை கண்டேன். மெலிந்த, மரகதக் கை ஒன்று நான் நீந்திக்கொண்டிருந்த நீரில் என்னை நோக்கி வந்தது. நான் ஒரு மீனாக இன்னொரு மீனுடன் நீந்திக்கொண்டிருந் தேன். பின்னர் அந்தகை என்னை நீரிலிருந்து தூக்கி வெளி யேற்றியது. பின்னர் ஒரு குரல், ‘நான் உனக்கு எதையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன். என்ன வேண்டும் உனக்கு?' என்று கேட்டது. நான் சொன்னேன், ‘என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப வை' என்று. எனது வாழ்க்கை மாறிவிடும்... வெடித்துவிடும் என்று திகிலடைந்தேன். அது நடந்தது. என்னிடமுள்ள தீவிர மான அரசியல் நபர் வெளியே வரவேண்டியிருந்தது. அவள் ஒளிந்துகொள்ள வேறிடமில்லை. எனது சொந்த வாழ்க்கையில் பெருவிலை அதற்காகக் கொடுக்க வேண் டியிருக்கும். அது நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதை எப்படி கையாள்வது மற்றும் என்ன செய்துகொள்வது என்பதை கற்றுக்கொண்டேன். எனவே இப்போது எனக்கு அது அதிர்ச்சியில்லை. ஆனால், நான் ஒத்துக்கொள்கிறேன்- முன்பிருந்தேன் என்று.

மேலும் அந்த புகழ்? விமான நிலையங்களில் நீங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்ட அனுபவம் உண்டா?

ஆம், அது எப்பவுமே மரியாதைக்குரிய தன்மையில் நடைபெறுவதுண்டு. ஆனால், அது சோர்வடையச் செய்கிறது. நான் அதுகுறித்து எந்த புகாரையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், செல்ஃபீ மோகம் பெருகியி ருக்கும் இந்த நாட்களில் உங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள எல்லோருக்கும் ஒரு உரிமை இருக்கிறது. இது வொரு தொற்றுநோய். நான் மிகவும் பயந்த நேரங்களும் உண்டு. இந்த ஜெ.என்.யூ விசயம் நடந்து கொண்டிருந்த போது, சத்தமிடும் ஊடக நெறியாளர்கள் தொலைக்காட்சிகளில் என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். அது ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.

நீங்கள் தேசவிரோதியா?

நான் தேசவிரோதிகள் பட்டியலின் அ-பிரிவில் இருப்பவள்.

உங்களுக்கு மதநம்பிக்கை உண்டா?

இல்லை. சாதாரணப் பொருளில் நான் மதநம்பிக்கை உள்ளவள் அல்ல. ஆனால், நான் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் விளக்கும் ஒரு தீவிர மார்க்சிஸ்டும் அல்ல. அதேநேரத்தில், சமூகத்தை ஆய்வு செய்யும் மிக முக்கியமான வழிமுறை அது என்பதை நான் நம்புகி றேன். ஆனால், அதுவே அனைத்துக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. ப்ரவுஸ்டை போன்று நான் அனைத்தின் சாத்தியத்திலும் நம்பிக்கை கொண்டவள். அனைத்துக் கும், உயிரற்ற பொருட்களிலும் ஆன்மா இருப்பதாக நம்புகிறேன். புனைவு எழுதுவது நான் பிரார்த்தனைக்கு மிக அருகாமையில் வருமிடம். என்னுடைய கவனத்தை ஒன்றின்மீது மிக தாராளமாக செலுத்தவும், ஒன்றிருக்கி றது என்ற நன்றியுணர்ச்சியுடன் இருப்பதும், என்னிடம் ஒன்றிருக்கிறது, நான் அதன் மீது முழு கவனத்தையும் கொடுத்து அதை ஆராதிப்பேன் என்பதும் ஒரு உயர்ந்த சக்தி ஒன்றின்மீது கொள்ளும் பிரார்த்தனை போன்றது.

மரணம் உங்களை அச்சுறுத்துவது உண்டா?

மரணம் அல்ல. ஆனால் நோய்களும், பலகீனங்களும் அச்சுறுத்துவதுண்டு. மருத்துவமனைகள், சுகவீனம் மற்றும் மற்றவர்களின் நோய்களுடனும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஒரு அசைந்தாடும் நாற் காலி இங்கிருக்கிறது. வீட்டின் உணர்ச்சிப்பூர்வ பொருள் இது. என்னுடைய மிகவும் இனியதோழி ஒருவர் கொடுத்தது. அவள் புற்றுநோயால் மாண்டாள். புற்று நோய் அவள் மூளையை அடைந்தபோது எங்கள் இருவ ருக்கும் முடிவு நெருங்கியது தெரிந்துவிட்டது. முடிவு எப்படி ஏற்படும் மற்றும் அதை எப்படி சிறந்தமுறையில் எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ள நான் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்றேன். இன்னும் சிலவாரங்களில் மூளை செயலிழந்துவிடும் என்று மருத் துவர் கூறினார். எனவே அடுத்தநாள் எனது வீட்டுக்கு கையில் இந்த அழகான நாற்காலியுடன் மதிய உணவுக்கு வந்தார். நான் அதை விரும்பியதை அவள் அறிவாள். அவள் சொன்னாள், 'இது உன்னுடையது. அது இங்கே இருக்கட்டும்' என்றார். மேலும் அவள், ‘இதில் நீ அமர்ந்து உன்னுடைய புதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை என்னுடைய மூளை செயல்படும் இப்போது படித்துக்காட்டவேண்டும். நான் எங்கு செல்கிறேனோ அந்த இடத்துக்கு உன்னுடைய நூலின் ஒரு துணுக்குடன் செல்ல விரும்புகிறேன்' என்றார். அவர் இறந்தார். மரணம் குறித்த எனது பயம் அதன் பிறகு குறைந்துவிட்டி ருந்தது. அவளால் அது முடியும் என்றால், என்னாலும்.. என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் நோய்வாய்ப் படுதல் கொடுமையானது.

எதைப் பற்றி நாமெல்லோரும் பயப்படவேண்டும்?

உள்நாட்டுப் போர்.1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஒரே நோக்கம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்பதுதான். அரசாங்கத்தின் திட்டங்களை வழிநடத்தும் அமைப்பாக இன்று அது தன்னை நிலைநிறுத்தியிருக்கி றது. பாகிஸ்தான் அதனை இசுலாமியக் குடியரசாக அறி வித்த பிறகு அதற்கு நேர்ந்ததைப் பாருங்கள். எது ‘உண்மையான இசுலாம்' எது உண்மையானதில்லை என்று முடிவு செய்ய பலரும் முயன்றதில் அந்தநாடு சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தானை விடவும் மிகவும் சிக்கலான, பன்முக நாடு. இந்து ராஷ்டி ரம் இங்கு ஏற்படவே முடியாது. நமது தொண்டைக் குழிக்குள் அவர்கள் தள்ளினால், நாம் நொறுங்கி விழுவோம்.

என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

ஸ்வெத்லனா அல்க்ஸிவிச் எழுதிய செர்னோபில் பிரார்த் தனை என்ற நூலைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ள புத்தகம். ஒரு அழகான உரைநடையை அளியுங்கள்;  உங்கள் பின்னே எங்கும் வரத் தயாராக இருக்கிறேன்.

பிடித்த இலக்கியவாதிகள்?

ஷேக்ஸ்பியர், கிப்ளிங், ரில்க்... பாடப்படக்கூடிய வாக்கி யங்களின் குருக்கள் இவர்கள். அழகான உரைநடையின் வசீகரத்துக்கு மயங்கும் வேசி நான். இசைக்கப்படும் உரைநடையாக இருக்கவேண்டும். ஷேக்ஸ்பியரின் எந்த வரியாக இருப்பினும் என்னை புல்லரிக்கச் செய்யும். அல்லது நபொகவ். மேலும் ஜான் பெர்கர். என்ன ஒரு வனப்பு!  ஜேம்ஸ் பால்ட்வின் மற்றும் டோனி மோரிசன்.

அனைவரும் அவசியமாக படிக்கவேண்டியது?

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோருடைய எழுத்துக்களை அனைவரும் படிக்கவேண்டும் என்று சொல்வேன். இந்தியச் சமூகத் தில் சாதி ஒரு புற்றுநோய் என்பேன். நாம் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றால், நமது சமூகம் தொடர்ந்து அழுகிய நிலையிலேதான் இருக்கும்.

கன்னையா குமார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் சொன்ன பலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது. அவர் வெளியே வந்தபிறகு வழங்கிய உரை என்னை மிகவும் ஈர்த்தது. அது உற்சாகமூட்டியது. பலரிடம் கவிந்திருந்த பயத்தின் புகைப்படலத்தைப் போக்கியது. அவருடைய உயிர்ப்பு பிடித்தது. எல்லோருமே என்னை பின் தொடர்ந்து நான் சொல்வதை திரும்ப சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அதுபோலவே நான் நம்புவ னவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவதில்லை. இதைத்தான் எதிர்ப்பின் பன்முகத் தன்மை என்கிறேன்.

இந்த உலகை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?

உங்களை எங்கே பொருத்திக்கொள்வது என்று முடிவெடுங்கள். யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

நம்பிக்கை எப்போதும் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். சில நேரங்களில் மகிழ்ச்சிதரும் அடுத்தவரியை எதிர்நோக்கி இருப்பேன். பெருங்காட்சிகள் இங்கே அரங்கேறுகின்றன- காலநிலைமாற்றம், அணுஆயுதப் போர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பின்னர் சிறுகாட்சிகள் வருகின்றன. பெரிய சித்திரத்தின் இருள் என்னை அடையத் துவங்கும் போது நான் கீழிறங்குவேன். ஒரு தவளையாக மாறி பாரவண்டிகள் செல்லும் நெடுஞ் சாலையில் குதித்து கடப்பேன். அதுவே சாத்தியமானது. வலப்பக்கம் பார், இடப்பக்கம் பார்... செல்! செல்! செல்! இன்னொரு நாள் போராட வாழு.

புதுவிசை 47


Friday, August 25, 2017

குடிமக்கள் மீது ஓர் உளவியல் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - புதுவிசை 48வது இதழ்

நாட்டின் வளங்களையும் உழைப்பையும் சேமிப்பையும் களவாடிக் கொழுப்பதற்கென, இதுகாறும் தான் உருவாக்கி வைத்துள்ள ஏற்பாடுகள் யாவும் காலாவதியாகிவிட்டதாக ஆளும் வர்க்கம் கருதுகிறது. எனவே அது நடப்பிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியல் சாசனம், சட்ட திட்டங்கள், மரபுகள், மதிப்பீடுகள் என அனைத்தையும் தனது சுரண்டல் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக மாற்றியமைப்பதில் மும்முரமாகியிருக்கிறது. இதன் பொருட்டு அரசு இயந்திரமும் அரசாங்கமும் அப்பட்டமாக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமென அது விரும்புகிறது. இந்த இழிமுயற்சியோடு லகுவில் பொருந்துவதாக சங் பரிவாரத்தை அடையாளம் கண்டுள்ள ஆளும் வர்க்கம் அதனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்ததற்குரிய பலன்களை அதீதமாய் ஈட்டி வருகிறது.

சங் பரிவாரம், தனது அரசியல் கட்சியின் மூலம் எழுப் பிய ‘வளர்ச்சிஎன்ற முழக்கம் அதன் மெய்யான பொருளில் ஆளும் வர்க்கத்தின் லாப வளர்ச்சியையும் சுரண்டல் வேகத்தையுமே குறிக்கிறது. தனது இந்துத்துவச் சேனைகளின் பலத்தில் மத, சாதிய மோதல்களை நடத்தி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சங் பரிவாரம், அந்தப் பதற்றம் என்னும் திரையின் மறைப்பில் மட்டுமீறிய கடனுதவி, கடன் தள்ளுபடி, மானியங்கள், வரிச்சலுகை, அரசுத்துறைகளை சல்லிசான விலையில் கொடுப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்குவது என அரசதிகாரத்தை முழுமையாக திருப்பிவிட்டு இந்தியப் பெருநிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மடைமாற்றுகிறது. அதே வேளையில் போதிய சிகிச்சைக்கு வழியின்றி மருத்துவமனையிலேயே பச்சிளங் குழந்தைகளையும் சாகக் கொடுக்கிறது. வெகுமக்களுக்கு பிணங்களையும் கார்பரேட்டுகளுக்கு வளங்களையும் பகிர்ந்தளிக்கிறது சங் பரிவாரம்.  

மக்களுக்காக அரசு என்றில்லாது அரசுக்காக மக்கள் என்றாக்கும் சங் பரிவார ஆட்சி, ஒவ்வொருவரது அன்றாட தனிப்பட்ட வாழ்விலும் நேரடியாக தலையிட்டு கண்காணிக்கவும் ஒடுக்கவும் சட்டப்பூர்வமான வழிகளை பயன்படுத்துகிறது. தன்னோடு இணங்கிப்போகாத - மாறுபட்ட அரசியல் / பண்பாட்டு பின்புலம் உள்ளவர்களை தாக்கவும் அழிக்கவும் சிறுமைப்படுத்தவும் அவர்களது நிலைப்பாடுகளை குலைத்துப்போடவும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்யவும் பாசிஸ்ட்டுகளும் நாஜிகளும் கையாண்ட மனிதத்தன்மையற்ற அத்தனை வழிகளையும், கருஞ்சட்டை- பழுப்புச் சட்டைப் படைக்கு இணையான சட்ட விரோத காவி அமைப்புகளையும் சங் பரிவாரம் கைக்கொண்டுள்ளது. மனித சமூகத்தின் ஆழ்மனங்களில் நொதித்துக்கிடக்கும் கீழ்மைகளின் திரண்ட வடிவமாக உள்ள சங் பரிவாரம் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் பரவலாக்குவதற்கும் தேவையான ஒத்தாசைகளை ஆளும் வர்க்கத்திடமிருந்தும் அதன் ஊடகங்களிடமிருந்தும் எளிதாக பெற்றுக் கொள்கிறது.

அச்சத்தையும் பீதியையும் கிளப்பி மக்களின் யோசிப்பு முறையிலும் செயல்பாட்டிலும் மதிப்பீட்டிலும் குறுக்கீடு செய்து தம்மைத்தாமே முனைமழுக்கிக் கொள்கிறவர்களாகவும், சுய தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும் மாற்றிக் கொள்ளும்படியாக குடிமக்கள் மீது ஓர் உளவியல் போரை சங் பரிவார ஆட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை காலத்துக்குள் நாட்டைத் தள்ளிக் கொண்டிருக்கிற அது, குடிமக்களுக்கு தமது உடைமைகள் மீது மட்டுமன்றி உடல் மீதும் கூட முழு உரிமை இல்லை என்றதன் மூலம் அவர்களது உயிர் வாழும் உரிமையினையே கேள்விக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில்,  தன்னைப் பற்றிய ரகசியங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான சுதந்திரம் அரசியல் சாசனத்தின் படி தனிநபரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று  என்கிற தீர்ப்பினை வழங்கியதன் மூலம் எதேச்சதிகார சங் பரிவார ஆட்சியின் செவுளில் அறைந்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

***
ஐஐடி, மருத்துவக் கல்லூரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஆண்டுக்கு 100 பில்லியன் அளவுக்கு பணம் புழங்கும் தொழிலாக உருவெடுத்து வருவதால் அதில் முதலீடு செய்தால் லாபம் கொழிக்குமென அசோசெம் போன்ற முதலாளிகள் சங்கம் கும்மாளம் போட்டு வந்த நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியிருப் பது தற்செயலானதல்ல. தமிழக மக்கள் தமது வருங்கால தலைமுறைக்கென சுயமாக உருவாக்கிக்கொண்ட மருத்துவக் கல்லூரிகளையும் சமூக நீதியையும் நீட் ஏற்பின் மூலம் சங் பரிவார ஒன்றிய அரசிடம் பறிகொடுத்திருக்கிறது மாநில அரசு. வெவ்வேறு பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களை ஒரேவகையான தகுதி நுழைவுத் தேர்வை எழுத வைப்பதே இயற்கை நீதிக்கு எதிரானது என்கிற நியாயத்தை உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்திப் பெறுவதில் தமிழக ஆட்சியாளர்கள் தவறியுள்ளனர். நீட்டை எதிர்த்த போராட்டம் சம்பிரதாயமானதாக அல்லாமல் சமூக நீதியை, மாநில உரிமையை, மாணவர்களின் எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கானதாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

***
புதுவிசையை 50வது இதழுக்குப் பின் இணைய இதழாக கொண்டுவர உத்தேசம். சந்தாக்களை திரட்டுவதில் எங்களது குறைமுனைப்பாலும், விற்பனைத்தொகையை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகளினாலும் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையினால் இந்த முடிவு. இந்நிலையில் திருச்சி BHEL தொழிலக வாசகர்கள் ‘மிகுதிநேரப் பணி செய்தாவது எம்மாலான நிதியுதவியைச் செய்கிறோம், புதுவிசையை அச்சு வடிவிலேயே தொடருங்கள்என்று பத்தாயிரம் ரூபாயை முதல் தவணை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். நிதிநிலை சீரடையுமாயின் தோழர்களின் நன்னோக்கையும் விருப்பத்தையும் புதுவிசை நிறைவேற்றும்.

- ஆசிரியர் குழு, புதுவிசை

செப்டம்பர் முதல்வாரத்தில் கிடைக்கும்.
பிரதிகளுக்கு: ந.பெரியசாமி - 9487646819

Wednesday, August 23, 2017

இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால் - இக்பால்

1
காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி முதல்முறையாக பிரதமர் பொறுப்பேற்ற 1985-87 காலக்கட்டத்தில்தான் பொதுத்துறையின் முக்கியத்துவத்தை பின்னுக்குத்தள்ளி  தனியார் முதலாளிகளை மேலும் கொழுக்க வைப்பதற்கான திட்டங்களை அரசின் திட்டமாகவே ஆக்கிடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 1986 செப்டம்பர் மாதத்தில் இந்தியத் தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கான (Reforms) விரிவான செயற்திட்டத்தை வரையுமாறு திட்டக்குழுவை அவர் பணித்தார், ஒரு விரிவான திட்டமும் வரையப்பட்டது.

1989-90 காலக்கட்டத்தில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை பொறுப்பில் இருந்தது. அதன்பின் 1991 மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 232 இடங்களில் வென்றது. மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படும் முன் நடந்த முதற் கட்டத் தேர்தலில் 319 இடங்களில் 130 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம்கட்டத் தேர்தலில்  202 இடங்களில் 102 இடங்களை அதாவது சரிபாதி இடங்களை வென்றது அனுதாப அலையின் காரணமாகவே என்பது தெரிந்த செய்தி. அப்போதும்கூட பெரும்பான்மை கிட்டவில்லை. அன்றைய சூழலில் மதவெறி ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் ஆட்சியமைப்பதை தடுக்கும் ஒற்றை நோக்குடன் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆட்சியில் பங்குபெறாமல் ஆதரவளித்தனர், நரசிம்மராவ் பிரதமர் ஆனார்.

ரிசர்வ் வங்கி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அரசு அதிகாரியான மன்மோஹன் சிங் நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். அன்றைய நிலையில் இந்தியப்பொருளாதாரம் மிகமிக மோசமான நிலையில் இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் To the brink and back என்ற நூலில் சொல்கின்றார். அன்றைய மத்திய அமைச்சரவைச் செயலாளரான நரேஷ் சந்திரா ‘பிரதமர் முன்னுள்ள உடனடி சவால்கள்அடங்கிய எட்டுப்பக்க ரகசியக்குறிப்பை நரசிம்மராவிடம் அளித்தபோது ‘நமது பொருளாதாரம் இத்தனை மோசமான நிலையில் உள்ளதா?’ என்று அவர் கேட்டதாகவும், நரேஷ் சந்திரா ‘இல்லை, உண்மையில் மிகமிக மோசமாக உள்ளதுஎன்று சொன்னதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகின்றார். இத்தேசம் அப்படி யானதொரு மிகப்பெரும் ஆபத்தான சிக்கலில் இருந்தது உண்மைதான் எனில் ஒருசில வருடங்கள் மட்டுமே ஆட்சியிலிருந்த (காங்கிரஸ் அல்லாத)  மொரார்ஜி தேசா யின் ஜனதா ஆட்சி, அதன்பின் வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற அரசுகளைத் தவிர 1947க்குப் பின் இத்தேசத்தை தொடர்ந்து ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சியின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் வசதியாக மறைத்து விடுகிறார்கள். விசித்திரம் என்னவெனில் அப்பெரும் சிக்கலில் இருந்து தேசத்தை மீட்பதாகச் சொல்லிக்கொண்டு சர்வதேச-இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இத்தேசத்தை மேலும் அகலமாகத் திறந்துவிடும் எல்.பி.ஜி. எனப்படும் தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் ஆகிய மூன்று கோட்பாடுகளைத்தான் தறிகெட்டு ஓடும் வாகனத்தின் வேகத்தில் நடைமுறைப்படுத்தினார்கள்.

இதன்பின் இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்றை 1991க்கு முன், பின் என பகுத்தெழுதத்தக்க வகையில் பெரும் சீரழிவை இத்தேசம் சந்தித்தது. அதுகாறும் இந்தியப்பெரு முதலாளிகளுடன் மல்லுக்கட்டிக் கொண் டிருந்த இந்திய இடதுசாரி அரசியலும் தொழிற்சங்க இயக்கமும் சர்வதேசக் கார்ப்பரேட்டுகளோடும் தெருவில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகிய காங்கிரஸ் அல்லாத அரசுகளின் காலத்தில் சொல்லும்படியாகவும், 2000க்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசின் காலத்தில் ஓரளவும் எல்.பி.ஜி.யின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. இவை தவிர்த்த 1990க்குப் பின்னான காலத்தில் தனியார்மயம் மிக வேகமாக நடைமுறைக்கு வந்தது. கார்ப்ப ரேட்டுக்களின் சொர்க்க பூமியாக இந்தியா மிக வேகமாக மாறியது. இக்காலக்கட்டத்தில்தான் உலக கோடீசுவரர்கள் பட்டியலில் பல இந்தியர்களும் சேர்ந்தார்கள். இதே காலகட்டத்தில்தான் மூடப்பட்ட ஆலைகளின் பட்டியலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டி யலும் மிக நீளமானது. விவசாய நிலங்கள் பெரு முத லாளிகளின் நலன் பொருட்டும் நாற்கர அறுகரச் சாலைகளின் பொருட்டும் பிடுங்கப்பட்டதும் விவசாயிகள் கிராமப்புறங்களை விட்டகன்று நகர்ப்புறங்களில் தாம் இதுவரை செய்திடாத கட்டுமானத் தொழிலிலும் ஓட்டல்களிலும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களிலும் அத்தக்கூலி வேலைகளுக்காகத் துரத்தப்பட்டதும் இக்காலத்தில் தான். காங்கிரஸ் தொடங்கிவைத்த அழிவை சங் பரிவாரின் அடிப்பொடியான நரேந்திரமோடி மிக வேகமாக முன்னெடுத்துச் செல்வதை தேசம் இப்போது பார்க்கின்றது. மோடியின் வாயிலிருந்து அலங்கார வார்த்தைகள் அவ்வப்போது அணிவகுத்து வருகின்றன. செய்தித்தாட் களில் முழுப்பக்க விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. கார்ப்பரேட்டுகளே என் நண்பன் என்று சொல் வதற்கு நரேந்திரமோடி எப்போதும் கூச்சப்பட்டதில்லை.  அதானியின், அம்பானியின் துணையின்றி பயணம் எதையும் மேற்கொண்டதுமில்லை. இரும்பு, சுரங்கம், தோல், கம்ப்யூட்டர், பங்குச்சந்தை, பிட்சா, பர்கர், வறுத்த கோழிக்கறி என பல தொழில்களைச் செய்வதுபோல் ஊடகங்களையும் கார்ப்பரேட் அதிபர்கள் விலைக்கு வாங்கி ஒரு தொழிலாக நடத்துகின்றார்கள். நாம் பார்க் கின்ற ‘நடுநிலை' டி.வி.க்களும் நாளேடுகளும் இந்த கார்ப்பரேட் அதிபர்கள் நடத்துபவைதான். இந்த ஊடகங்கள்தான் 2014இல் நரேந்திர மோடியையும் 2016இல் ஜெயலலிதாவையும் நாற்காலியிலே உட்காரவைத்தன.

இப்பூவுலகின் சாமானியர் எவராயினும் அவர் உண்ணும் ஒரு கவள உணவாகினும் அருந்தும் ஒரு குவளை நீராகிலும் அதற்குப் பின்னால் எவனோ எவளோ எத்தனை பேரோ தம் உயிரைத் தத்தம் செய்து பெற்ற உரிமை என்பது சமூக வரலாறு. இவ்வுரிமைகளின் பொருட்டு தம் இன்னுயிரை சிறைக்கொட்டடிகளிலும் இருள் கவிந்த தனிமைச்சிறைகளிலும் தூக்குக்கயிறுகளிலும் நீத்தவர்களின் இரத்தம் சிந்தியவர்களின் வரலாறுகள் தேசங்களின் செயற்கையான எல்லைகளைத் தாண்டி ரத்த நாளங்கள் போல் நீள்கின்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுகாறும் அனுபவித்துவரும் உரிமைகளுக்கும் இவ்வாறான நெடிய வரலாறு உள்ளது. இவ்வாறு போராடியும் உயிர்நீத்தும் பெறப்பட்ட உரிமைகளை 1990களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தாமல் வெறும் அரசாணைகள் மூலம் வெட் டியோ சுருக்கியோ முற்றாக நீக்கியோ சின்னாபின்னப் படுத்தும் மக்கள் விரோத நடவடிக்கையில் காங்கிரசும் பாஜகவும் போட்டிபோடுகின்றன. தொழிற்சங்கச் சட்டம், தொழிற்தாவா சட்டம், தொழிற் சாலைகள் சட்டம் என ரத்தம் சிந்தியும் உயிர்த்தியாகம் செய்தும் வென்றெடுக்கப்பட்ட சட்டங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு அர்த்தம் இழக்கவைக்கப்படுகின்றன. அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின்-விவசாயிகளின் சக்தி மிகப்பெரும் அரசியல் பவுதீக சக்தி என்பதை நன்கு உணர்ந்துள்ள கார்ப்பரேட்டுகள் +அரசாங்கக் கூட்டணி, தொழிற்சாலைகளை மூடுவது, தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, காலியிடங்களை நிரப்பாமல் விடுவது, உற்பத்தியைக் குறைப்பது, நிரந்தரத் தொழிலாளர்களின் இடத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் என்னும் புதிய வகை அடிமை முறையைப் புகுத்துகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியோ சுருக்கியோ அவற்றை முனை மழுங்கச் செய்கிறது.

2
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ‘தொழிலாளர் வருங்கால வைப்பு  நிதியை (EPF)  எந்தத் தொழிலாளியும் எடுத்துப் பயன்படுத்த முடியாது' என்று இன்றைய பி.ஜே.பி.யின் மோடி அரசு புதிய ஆணையை வெளியிட்டது. வைப்பு நிதி என்பது ஒரு தொழிலாளி தன் அடிப்படை ‘ஊதியத்தில் 12 விழுக்காட்டைத் தனது சேமிப்பில் சேர்ப்பது. இதே அளவு சமமான தொகையை முதலாளியும் தனது பங்காக தொழிலாளியின் சேமிப்பில் சேர்க்கவேண்டும். ஒரு தொழிலாளி இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையின்றி இருப்பார் எனில் அவர் தனது வைப்பு நிதி சேமிப்பிலிருந்து ‘மொத்தப் பணத்தையும் திரும்பப் பெற முடியும். 2016 பிப்ரவரி 10 அன்று தொழிலாளர் அமைச்சகம் (நல அமைச்சகம் என்றும் சொல்கிறார்கள்) வெளியிட்ட ஆணையின்படி, தொழிலாளி ஒருவர் தனது மொத்த சேமிப்பிலிருந்து தனது பங்காக தான் செலுத்திய சேமிப்பை மட்டுமே திரும்பப் பெற முடியும், முதலாளி அளித்த பங்கை 58 வயது முடிந்த பின்னரே திரும்பப் பெறமுடியும். இன்னொரு கொடுமை என்ன வெனில் தொழிலாளியின் பங்கான 12%ல் 3.67% மட்டுமே வைப்பு நிதிக்குப் போகின்றது, மீதி 8.33%  ஓய்வூதிய நிதியில் தான் சேர்க்கப்படும், எனவே மொத்தமுள்ள 24%ல் 3.67 விழுக்காட்டை மட்டுமே திரும்பப் பெறமுடியுமாம். மாதம் 7000 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் பல லட்சம் தொழிலாளிகளுக்கு இது மிகமிகச் சொற்பமான தொகை என்பதைச் சொல்லவும் வேண்டாம். சி.ஐ.டி.யூ. வின் அகில இந்தியத் தலைவரான ஏ.கே.பத்மனாபன், “இந்த அறிவிப்பை வெளியிடும் முன் தொழிலாளர்கள் தம் விருப்பத்தைத் தெரிவிக்க, அதாவது  ‘சேமிப்பைத் திரும்பப் பெறுவதா சேமிப்பில் தொடர்ந்து வைத்துக் கொள்வதாஎன்று தேர்வு செய்யும் உரிமையை அவர் களுக்கே விடவேண்டும் என்று நாங்கள் அரசை வற்புறுத் தினோம். அரசுத்தரப்பு இதை நிராகரித்தது'' என்று சொல்கின்றார். பிராவிடன்ட் நிதிக்கான மத்திய அறங் காவலர் வாரியத்தில் இவர் உறுப்பினராகவும் உள்ளார்.

இதுவே மிகப்பெரும் பாதகம் என்றால் இதனைவிடவும் பாதகமான, மோசடியான ஒரு திட்டத்தை மோடி அரசு இதற்குமுன் முன்வைத்தது: அதாவது வைப்பு நிதியைத் திரும்பப்பெறும் போது அதற்கான பணத்திற்கு வருமான வரியை விதிக்க அரசு திட்டமிட்டது. புரிகின்றதா? தொழிலாளர்கள் தாங்கள் சேமித்த பணத்தையே தமக்கான ‘வருமானமாகக் கருத வேண்டுமாம். பலத்த கண்டனங்களுக்குப் பிறகே இந்த மோசடித் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது.

58 வயதில்தான் திரும்பப் பெறமுடியும் என்ற மோடி அரசின் ஆணைக்கு நாடெங்கிலும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஏனெனில் தொழிலாளர் வைப்புநிதிக்கு நேரடி யாகத் தொடர்புள்ளவர்கள் மாதம் 7000- 8000 ரூபாய் வருமானமுள்ள கோடிக்கணக்கான மக்களே. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தைப் பரிசீலிக்க நியமிக்கப் பட்ட ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு அதிகாரிகளின் உயர்ந்தபட்ச மாத அடிப்படை ஊதியத்தை 2,10,000 ரூபாய் எனப் பரிந்துரைத்துள்ள நிலையில் (பிற அலவன்சுகள் தனி) மாத ஊதியம் மொத்தமாக பத்தாயிரம் கூடப் பெறாத பலகோடித் தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள்.

இந்தியாவெங்கிலும் அணிதிரட்டப்படாத அல்லது தொழிற்சங்கங்களில் இணையமுடியாத அல்லது தொழிற் சங்கங்களால் திரட்டப்படமுடியாத தொழிலாளர்கள் பல லட்சம் அல்லது சில கோடிகள் இருக்கின்றார்கள் எனில் அது ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழில்தான். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization) அறிக்கையின்படி, “ஆயத்த ஆடைத் தொழில்தான் நகர்ப்புற இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாக உள்ளது, தேசிய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 20 வருடங்களுக்கு முன் முறைசாராத் தொழில் என்ற நிலையில் இருந்தது மாறி தொழிற்சாலை சார்ந்த தொழிலாக அது மாறியுள்ளது.'' முக்கியமாக இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத் தில் பெருமளவு வருவாய் ஈட்டும் தொழில்களில் இது முக்கியமானது. குறிப்பாக பெங்களூர், திருப்பூர், சென்னை, டெல்லி நகரங்களில் மட்டும் பத்துலட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர புறநகர்கள், சிறுநகரங்கள், கிராமங்கள், வீடுகள் என மேலும் பல லட்சம்  தொழிலாளர்கள் உள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பிரபல பிராண்டுகளாக அறியப்பட்ட ஆனால் இந்தியக்கடைகளில் விற்கப்படும் உள்ளாடைகள், சட்டைகள், பாண்ட்டுகள், அரை, முக்கால் டிரவுசர்கள் என அனைத்தும் இவர் களைப் போன்ற பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் தைப்பவையே, உள்நாட்டில் அந்நிய பிராண்டு லேபிள் ஒட்டப்பட்டு விற்கப்படுவதோடு, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம்?

உதாரணமாக பெங்களூரின் பிராண்டிக்ஸ் இந்தியா என்னும் கம்பெனி உள்ளாடைகள் தயாரித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. 19,000 தொழிலாளர்கள் பணி செய்கின்றார்கள், வருட நிதிச் சுழற்சி ரூபாய் 1500 கோடி. ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் பெங்களூரின் மிகப்பெரும் ஆயத்த ஆடைக்கம்பெனி, 45 இடங்களில்  மொத்தம் 75,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ்க்கு 16 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள், பெங்களூரில் மட்டும் 5,000 தொழிலாளர்கள். டெக்ஸ்போர்ட் ஓவர்சீஸிற்கு 13 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள். கோகுல்தாஸ் இமேஜஸ்க்கு 13 தொழிற்சாலைகள், 2,000 தொழிலாளர்கள். வால்மார்ட், போலோ, நைக் உள்ளிட்ட பல பிரபல பிராண்டுகளைத் தைப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்களே. இதே பிராண்டிக்ஸ் இந்தியா கம்பெனி, விசாகப்பட்டினத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 19,000 தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளது. இத்தொழிலில் பெங்களூரில் மட்டுமே சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளார்கள்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இத் தொழிற்சாலைகளுக்கு அதாவது முதலாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வாரிக் கொட்டுகின்றன. உதாரணமாக, ஆந்திர அரசு பிராண்டிக்ஸ் கம்பெனிக்கு அரசுநிலத்தை ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு வெறும் ஓராயிரம் ரூபாய்க்கு மட்டுமே குத்தகைக்குவிட்டுள்ளது.

85 விழுக்காட்டிற்கும் அதிகம் பெண்கள் பணிபுரியும் இத்தொழிலில் நிலவும் மிக மோசமான பணிக்கலாச்சாரம், பாதுகாப்பின்மை, அடிமைத்தனம், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தையும் ஏமாற்றுதல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையை மறுத்தல், அனைத்திற்கும் மேல் பாலியல் தொந்தரவு ஆகிய அனைத்துக் கொடுமைகளும் இத்தொழிலாளர்களை எப்போதும் கொதிநிலை யிலேயே வைத்துள்ளன. 10 மணிநேரம் வரை வேலை. பீஸ்ரேட் முறையில் ஒரு மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பீஸ்களின் எண்ணிக்கையை இருமடங்கு, மும் மடங்கு என உயர்த்துவது (அதே கூலிக்கு), கழிப்பறை கள் உபயோகிப்பதைக்கூட ஒருநாளைக்கு இத்தனை முறைதான், அதுவும் இத்தனை நிமிடங்கள்தான் எனக் கண்காணிப்பது, உடல் நலக்குறைவால் எதிர்பாராது விடுப்பெடுக்க நேர்ந்தால் மீண்டும் தொழிற்சாலைக்குள் நுழையவிடாமல் தடுத்து புதிய நிபந்தனைகளை விதிக்கும் தந்திரம், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது, சிறு தவறுகளுக்கும் முகத்தில் துணிகளை விட்டெறிவது, ஆண்களே மேலதிகாரிகளாக, கண்காணிப்பாளர்களாக இருப்பதால் அவர்களால் தரப்படும் கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பாலியல் வன்முறைகள், பிரசவத்திற்குப் பிறகு அரசு விதிகள் தந்துள்ள பிரசவகால ஊதியத்துடன் கூடிய விடுப்பை மறுப்பது, பிரசவிக்கும் பெண்களை வேலையிலிருந்து நீக்குவது, குழந்தைகள் காப்பகம் இருந்தாலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கமறுப்பது (அதாவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதால் உற்பத்தி பாதிக்கப்படுமாம்) எனத் தொடரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளுக்கு ரூ.287 (ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாட்கள் உட்பட) 26 நாட்களுக்கு எனில், ரூ.7462ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் 7000 மட்டுமே தரப்படும். ரூ.7462 தரப்பட்டதாகக் கணக்கில் காட்டப்படும். இதுவன்றி இலக்கை எட்டாத தொழிலாளி கூடுதலாக 2 மணி நேரம் வேலை செய்யவேண்டும், ஆனால் ஓவர்டைம் ஊதியம் தரப்படாது. இ.எஸ்.ஐ, வைப்புநிதி, கேன்டீன், பஸ் வசதி எனப் பலவகைகளிலும் பிடித்தம் செய்யப்பட்ட பின் இந்த 7000 ரூபாயும்கூடக் கையில் வராது பிராண் டிக்ஸ் தொழிலாளர்கள் பெங்களூரைச் சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களிலிருந்து கம்பெனியில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வருகின்றார்கள்.  காலை 6 மணிக்கு தொழிற் சாலையில் இருக்க அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். மாலையும் வீட்டை அடைய 8மணி ஆகலாம். ஆக குழந்தைகளின் கல்வி, உடல்நலன், தனது உடல்நலன், அன்றாடக் குடும்ப விசயங்கள், சமூகத் தொடர்புகள் அத்தனையும் இரண்டாம்பட்சத்துக்கும் பின்னே எங்கோ போய்விடுகின்றன.

இதற்கு முன் இத்தொழிலில் விடுதிகள் இருக்காது. இப்போது விடுதிகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து மட்டு மின்றி வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், ஒரிசா போன்றவற்றில் இருந்தும் இத்தொழிலில் இப்போது பெங்களூரில் பார்க்க முடிகின்றது. தந்திரமாக ஏற்கனவே பலபெயர்களில் பிடிக்கப்படும் ஊதியத்தில் விடுதி வாடகையையும் நிர்வாகங்கள் பிடித்துவிடுகின்றன.

முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, ஒடுக்கப்பட்ட ஷெட்யூல்டு சாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் இருந்தும், சிறுபான்மைச் சமூகங்களான இஸ்லாமியர்களும் இத்தொழிலில் பெரும்பான்மையினர், அதிலும் பெண்கள், இவர்களின் சில நூறு ரூபாய்கள் மாத ஊதியத்தை நம்பியே இக் குடும்பத்தினர் வாழ்கின்றார்கள், இப்பெண்களின் கணவர்கள் தினக்கூலி வேலைக்குச் செல்வார்கள் அல்லது வேலைக்குச் செல்லமாட்டார்கள். சென்றாலும் அவ்வருவாயை மதுவைக் குடித்துத் தீர்த்துவிடுவார்கள்.

இத்தகைய பல்வேறு அழுத்தங்களும் பிரச்சனைகளும் ஒரு பெண்மணியை ஒரு தொழிற்சாலையில் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வேலை செய்ய அனுமதித்தால் அதுவே பெரிய சாதனையாகும். ஐந்து வருடங்கள் பணி செய்தால் கிராஜுட்டி எனப்படும் பணிக்கொடையை வழங்கவேண்டியிருக்கும் என்பதால் ஐந்து வருடங்கள் முடியும் முன்பே பல்வேறு நெருக்கடிகள் தரப்படும். தொழிலாளர்கள் தாமாகவே வேலையைவிட்டு நின்று விட வேண்டும் என்பதே கொடூரமான நோக்கம். ஐந்து வருடங்களுக்கு மேல் பணிபுரிவோரின் வருகைப்பதிவு செய்யப்படாது, ‘பஞ்சிங்' முறை மறுக்கப்படும். இத்தனை கொடுமைகளையும் சகிக்காமல் வேலையை விட்டுச்சென்றால், ஆனால் மீண்டும் அதே தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தால் அவர் புதிய தொழிலாளியாகி விடுவார். எனவே புதிய பிராவிடன்ட் நிதிக்கணக்குத் தொடங்கப்படும்.

தொழிற்சங்கங்கள் வெளியிடக்கூடிய துண்டறிக்கைகளைக் கையில் வைத்திருந்தால் அதுபோதும் வேலையை விட்டு நீக்குவதற்கு. அப்படியிருக்க ஒரு தொழிற்சங்கம் தொடங்க அல்லது ஒரு தொழிற்சங்கத்தில் இணைய முனைவோரின் நிலை பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் பெங்களூரைப் பொருத்தவரை 1990களில் ஆயத்த ஆடைத்தொழிலில் சி.ஐ.டி.யூ பெருவாரியான சங்கங்களைக் கொண்டிருந்ததாகவும் வலிமையான போராட்டங்களை நடத்திய தொழிற்சங்கமாக இருந்ததாகவும் அறியமுடிகின்றது. ஆனால் 1990களின் தொடக்கத்தில் மத்திய காங்கிரஸ் அரசால் புகுத்தப்பட்ட தனியார் மய- தாராளமயக் கொள்கைகளின் விளைவாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டதும் பழிவாங்கப்பட்டதும் இத்தொழிலில் தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்துக்குக் காரணமானவை.

3
இந்நிலையில்தான் தமது சொற்ப சேமிப்பான வைப்பு நிதிச் சேமிப்பிலும் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி அரசு கொடூரமாகக் கைவைப்பது கண்டு யாதொரு அமைப்பும் கட்சியும் தொழிற்சங்கமும் அறைகூவல் விடுக்காமலேயே ஏப்ரல் 18,2016அன்று பெங்களூரின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கோபாவேசம் கொண்டவர்களாக வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் திரண்டார்கள். மிகச்சில ஆண்களும் பங்குபெற்றார்கள். இது வரலாற்றில் தனியாகக் குறிப்பிடவேண்டிய ஒரு போராட்ட நிகழ்வாகும்.

பெங்களூர் போராட்டத்துக்கு முன்பாகவே விசாகப்பட்டினத்தில் அச்சுதபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் இந்தியா கம்பெனியின் 19000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். கம்பெனி வாயில் முன்பு தர்ணா செய்து உட்கார்ந்தார்கள். கம்ப்யூட்டர்மீது பெரும் நம்பிக்கை என்பதை விடவும் பக்தியோடிருப்பவரும் ஆளுயர லத்திகளைக் கண்டுபிடித்து போலீசுகளின் கையில் கொடுத்து விவசாயிகளின், தொழிலாளர்களின் பல போராட்டங்களின் மீது ஏவி பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரரும் மோடியோடு சேர்ந்தே ஸ்மார்ட் சிட்டி கனவைக் காணும் நவீனருமான சந்திரபாபு நாயுடு இப் போராட்டத்தைக் கண்டு சகித்துக்கொள்ளாதவராக, மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு உயர், நடுத்தர, கீழ் அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள், சுய உதவிக்குழுக்கள், தனது கட்சிக்காரர்கள் என அனைவ ரையும் களத்தில் இறக்கி தொழிலாளர்களை மிரட்டினார், போராட்டத்தை ஒடுக்க முனைந்தார். கர்நாடக காங்கிரஸ் அரசும் இதேபோன்ற நடவடிக்கையில்தான் இறங்கியது. பெங்களூரில் காங்கிரஸ் அரசின் போலிஸ் மோசமான போராட்ட ஒடுக்குமுறையில் இறங்கியது. தொழிலாளர்களின் போராட்டங்களை தொடக்க நிலை யிலேயே கிள்ளி எறிவதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், தெலுங்குதேசம் என அனைவரும் ஒரே அணியில் நின்றார்கள்.  பெங்களூரில் போராடிய தொழிலாளர்களுடன் கலந்துவிட்ட சமூக விரோதிகள் பேருந்துகளை எரித்தது திட்டமிட்ட வகையில் போராட்டத்தைச் சீர் குலைப்பதற்கே. இதனால் போலீஸ் தடியடி நடத்தியது. அரசும் அடக்குமுறைக் கருவியான போலீசும் பெருமுதலாளிகளின் நலனுக்காவே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமானது.

பெங்களூரில் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலை யில் இத்தன்னெழுச்சியான போராட்டம் முதலில் வெடித்தது. தொழிலாளர்கள் வெளியே வந்து மைசூர் சாலையில் மறியல் செய்தார்கள். 80கி.மீ தொலைவில் பொம்மனஹள்ளியில் ஷாஹியின் மற்றொரு தொழிற்சாலையின் தொழிலாளர்களும் வெளியேற செய்தி காட்டுத்தீயெனப் பரவியது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைகளிலும் வீதிகளிலும் திரண்டார்கள். போலீசோடு சேர்ந்துகொண்டு தனியார் செக்யூரிட்டி ஆட்களும் தொழிலாளர்களை லத்தி கொண்டு தாக்கினார்கள். சில நூறு பேர்களை போலீஸ் கைது செய்தாலும் மறுநாளும் போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பிடத்தக்க விசயமாக நிரந்தரத் தொழிலாளர்களுடன் காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் இப் போராட்டத்தில் இணைந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கர்நாடகா மாநிலச்செயலாளர் மீனாட்சிசுந்தரம், “இக்கோபாவேசப் போராட்டம் யாராலும் அறைகூவல் விடுக்கப்பட்ட ஒன்றல்ல, தன்னெ ழுச்சியானது'' என்கின்றார். பெங்களூரில் எந்த ஒரு தொழிலிலும் கடந்த 10 ஆண்டுகளில் இப்படியான சக்தி யான ஆவேசமானதொரு போராட்டம் நடந்ததில்லை என்றும் கூறுகின்றார். தாராளமயம்-தனியார் மயத்தின் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உரு வாக்கப்பட்டபின் ஆயத்த ஆடைத்தொழிலாளர்களை மட்டுமல்ல, எந்தத்தொழிலிலும் எந்தத் தொழிலாளியையும் தொழிற்சங்கத்தில் இணைப்பதோ முடியாத விசயமாகிப் போனதால் தொழிற்சங்க இயக்கம் தேய்ந்து சிதைந்ததை சி.ஐ.டி.யூ உள்ளிட்ட பல தொழிற்சங்கத் தலைவர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார்கள்.

4
உழைக்கும் பெண்கள் மிகப்பெரிய அளவில் வீதிகளில் திரண்டு, எந்தவொரு அணி திரட்டப்பட்ட தொழிற்சங்கத்தின் அல்லது அமைப்பின் பின்னால் இல்லாமல் இரண்டுநாட்கன் போலீஸ் அடக்குமுறையையும் தனி யார் ரவுடிகளையும் எதிர்கொண்டு போராடியது 1990 களுக்குப்பின் இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் இரும்புத்தொழில், கார் உற்பத்தி, கத்தரிக்காய் தக்காளி விவசாயம், சூப்பர் மார்க்கெட் சங்கிலி, மால்நடத்துவது, மது தயாரிப்பது போல் ஊடகங்களை நடத்துவதையும் கார்ப்பரேட்டுகள் ஒரு தொழிலாக்கி விட்டதால் பெங்களூர் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை இடதுசாரி ஏடுகள் மட்டுமே வெளியிட்டுத் தமது கடமையைச் செய்தன. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் சில பேருந்துகள் எரிக்கப்பட்டதை மட்டுமே செய்தியாக்கியதன் மூலம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, குறிப்பாக மோடி அரசின் மோசடித்தனமான அரசாணையின் கொடூரத்திற்கு எதிரானதே இப்போராட் டம் என்பதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தன. போராட்டத்தின் இரண்டாவது நாள் வைப்புநிதி தொடர்பான தனது கொடுமையான ஆணையை மோடி அரசு சத்தமின்றி திரும்பப் பெற்றுக்கொண்டது. சாமான்ய மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே மோடி அரசு தனது அரசாணையை திரும்பப் பெற வேண்டியிருந்தது என்பதை பெருமுதலாளிகளின் ஊடகங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதால் இதனையும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.  தனது எஜமானரான இந்துத்துவா மோடிக்கு சாமானிய உழைக்கும் பெண்கள் கொடுத்த மிகப்பெரும் அடியை வெளியுலகுக்குக் கொண்டு செல்ல கார்ப்பரேட் ஊடகங்கள் ஒன்றும் அத்தனை அறிவீனமானவையல்ல.
5
இதே போன்றதொரு போராட்டம், பெண்களே முக்கியப் பாத்திரம் ஏற்ற ஒரு போராட்டம் கடந்த 2015 செப்டம்பர் மாதம் கேரளாவில் நடந்தது. அதுவும் கார்ப்பரேட் ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது. ஆனால் இப்போராட்டம் குறித்து எதிர்மறையான- அதாவது தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும்  குறிப்பாக இடதுசாரி அரசியலை கேள்விக்குள்ளாக்கும் திரிக்கப்பட்ட செய்திகளை கேரளாவின் ஊடகங்கள் திட்டமிட்டு கேரளமக்கள் மத்தியில் பரப்பியதில்  ஓரளவு வெற்றி பெற்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

மூணாறில் உள்ள கண்ணன் தேவன் மலைத்தோட்டத் தொழிலாளர்களின் மகத்தான போராட்டம் அது. அதா வது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட் டம். தேவிகுளம் தாலுகாவில் உள்ள இத்தோட்டம் 1,36,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தியப் பெருமுதலாளியான டாடாவுக்குச் சொந்தமானது. 2005ம் ஆண்டு டாடா டீ (இப்போது டாடா க்ளோபல் பிவரேஜஸ், உலகின் இரண்டாவது பெரிய தேயிலைக் கம்பனி) தனது மூணாறு தோட்டங்களை தொழிலாளர்களுக்கு ‘விற்பதாக' அறிவித்தது. அதாவது நிர்வாகத்தில தொழிலாளர்களும் 'பங்கு'பெறும் திட்டமாம்.  பெருமுதலாளியான டாடா அவ்வளவு நல்லவரா? புதிய கம்பெனியில் 13,000 தொழிலாளர்கள் 'குட்டி' பங்குதாரர்களாக ஆனார்கள். ஆனால் கம்பெனியில் 28.52 சதவீதப்பங்குகள் இப்போதும் டாடாக்கள் வசமே உள்ளன. இதன்றி 87.95 சதவீதப் பங்குகள் இப்போதும் டாடாநல அறக்குழுவுக்கும் கண்ணன் தேவன் மலைத் தோட்டக் கம்பெனிக்கும் சொந்தமாகவே உள்ளன. உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் ஒரு பங்கை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் உரிமையும்  டாடாக்கள் கையில் வைத்துள்ளனர். இதன்றி உள்ளூர் சந்தைகளில் தேயிலையின் விலையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக டாடாக்கள் இருக்கிறார்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் 70 விழுக்காட் டினர் பெண்களே. கொழுந்து கிள்ளுவது என்பது வெறுமனே கிள்ளுவதல்ல. லாவகம் வேண்டும். இதில் பெண்கள் பாரம்பரியமாகவே தேர்ந்தவர்கள் என்பதால் பறிக்கும் வேலை பெண்களுக்கும், களையெடுப்பது, மருந்து தெளிப்பது, உரம் வைப்பது போன்ற வேலைகள் ஆண்களுக்கும் ஆனவை. இத்தொழிலாளர்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்களைக் காண்பது அரிது. அனைவரும் தமிழர்களே. அதிகம் ஷெட்யூல்டு சாதி மக்களே. இவர்களது உறவுகள் இப்போதும் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றார்கள்.

தொழிலாளர் சட்டப்படி அவர்கள் ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலை பறித்தால் போதுமானது. ஆனால் 12 மணிநேரத்திற்கும் அதிகமான வேலை வாங்கப்படும். 60 கிலோ, 100 கிலோ வரையும் பறிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். மூன்று மாதங்களுக்கு 75 கிலோ அரிசி (ஒரு குடும்பத்துக்கு) தரப்படும், இதற்காக ஊதியத்தில் மாதம் ரூ.750 பிடிக்கப்படும். இது கிட்டத்தட்ட சந்தை விலைக்கு ஈடாகும். ரேஷன் விலையைவிட மிக அதிக மாகும். பிரிட்டிஷ் காலத்திய அடிமைகளை அடைக்கும் கொடும் கொட்டகைகளே  இவர்களுக்கு டாடா என்னும் பெருமுதலாளி கொடுத்துள்ள வீடுகளாம். ஆண், பெண், தாய், தகப்பன், குழந்தைகள் என அனைவரும் இதில் தான் படுத்துறங்க வேண்டும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளாலும் தடை செய்யப்பட்டுள்ள புற்றுநோய் உருவாக்க வல்ல அஸ்பெடாஸ் ஓடுகள்தாம் இங்கே வீட்டு ஓடுகளாம்.

கங்காணி ஒருவரின் வாக்கு முறைப்படி ஓய்வு என்பது இல்லாத ஒன்று, தேநீர் அருந்தும்போதுகூட ஒரு கையில் டம்ளரும் மறுகையில் இலை பறிப்பதும் தொடரும். தமது வேலைநிமித்தம் தொடர்ச்சியான குனிவதால் பல பெண்கள் கருப்பை பாதிக்கப் பட்டு கருப்பையையே இழந்திருக்கின்றார்கள்; தொடர்ச்சியான பூச்சிக்கொல்லிகளோடு ஆன புழக்கத்தால் ஆண்கள் விஷத்தாக்குதல் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். மழைக் காலங்களில் இப் பூச்சிக்கொல்லி நீரோடு கலந்து சமவெளியில் உள்ள ஊர்களின் குடிநீரை உபயோகிப்பதற்குத் தகுதியற்றதாக ஆக்குகின்றது. ஏறத்தாழ 60% பங்குகள் தொழிலாளர்களுக்கு எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் கம்பனியின் கட்டுப்பாடு டாடாவிடமே உள்ளது. தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக இருவர் இயக்குநர் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வது சும்மா பெயருக்கே, உண்மையில் அங்கு நடப்பது எதுவும் அவர்களுக்குப் புரியாது. கூட்டத்தில் தேநீர் அருந்திவிட்டு வருவார்கள்.

மே 2011இல் செய்து கொள்ளப்பட்ட ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் 31, 2014 உடன் முடிவுற்றது. அதிலிருந்து தொழி லாளர்கள் தொடர்ச்சியாக ஊதிய மாற்றம் கோரி வருகின் றார்கள். எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தோட்டத் தொழிலாளர் கமிட்டியில தொழிற்சங்கங்கள், தேயிலை முதலாளிகள், அரசுத் தரப்பு என முத்தரப்பும்  உள்ளன. 10ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்தார்கள். 2013-2014க்கு 19% போனஸ் வழங்கிய கண்ணன் தேவன் தோட்ட நிர்வாகம் 2014-15க்கு ஒருதலைப்பட்சமாக 10%  போனஸ் அறிவித்தது. 2014-2015 காலத்தில் நல்ல லாபம் ஈட்டியிருக்கின்ற முதலாளியின் அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே கண்ணன்தேவன் தொழிலாளர்கள் ‘மெதுவாக வேலை செய்வதுஎன்ற  போராட்டத்தை நடத்தத் தொடங்கினார்கள். இதனை எதிர்கொள்ள ‘லாக் அவுட்' செய்வோம் என டாடா நிர் வாகம் அச்சுறுத்தியது. லாக்அவுட் என்பது பிரச்சி னையை திசைதிருப்பும் என்பதால் சி.ஐ.டி.யூ  தலையிட்டு மெதுவாகச் செய்யும் போராட்டத்தைக் கைவிடச் செய்தது. ஏற்கனவே 2015 செப்டம்பர் 2  அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தார்கள். மறுநாள் 3ம் தேதி தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஊதிய உயர்வு, போனஸ் பிரச்னைக்காக வேலைநிறுத்தம் தொடங்கினார்கள். 2015 செப்டம்பர் 5 அன்று கண்ணன்தேவன் அலுவலகம் முன்பு சுமார்  50 பெண்கள் திரண்டு வேலைநிறுத்தத்தை அறிவித்தார்கள். சற்றுநேரத்தில் செய்தி பரவி மலையகம் எங்கிலுமுள்ள  பெண் தொழிலாளிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்கள் கழித்தே கேரள ஊடகங்கள் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டன. எப்படிப்பட்ட செய்திகள்? கேரளாவின் தொழிற்சங்க இயக்கங்களை தேயிலைத்தோட்டத் தொழிலாளிகள் புறக்கணித்துவிட்டதாகவும் புதிய அத்தி யாயம் எழுதப்பட்டு விட்டதாகவும் ‘மலையாள மனோரமாஏடு கும்மாளம் போட்டது. கேரளா பின்தங்கிப் போகக் காரணமே  இதுபோன்ற வேலைநிறுத்தங்களும் தர்ணாக்களுமே என்று கொட்டை எழுத்தில் பிரச்சாரம் செய்கின்ற மலையாள மனோராமா, கண்ணன் தேவன் போராட்டத்தைத் தனது போராட்டம் போல் சித்தரித்தது. உண்மையில் 2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் கேரளாவில் முழுஅளவு வெற்றிபெற்றதை மலையாள மனோரமா  விரும்பவில்லை. ஏனெனில் கேரளாவில் அது முழுஅளவு கடையடைப்பாக மாறி யது. தென்னை நார், தலைச்சுமை, முந்திரி, கைநெசவு, பீடி, கட்டுமானம், மோட்டார், லாட்டரி, அங்கன்வாடி - தொழிலாளர்களும், கேரள அரசுப் போக்குவரத்துத் துறை, ஃபாக்ட் உரத்தொழிற்சாலை ஊழியர்கள், கொச்சி துறைமுகத் தொழிலாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துப்பிரிவினரும் அன்றிருந்த மாநில காங்கிரஸ் அரசுக்கும் மத்தியில் இருந்த பாஜக அரசுக்கும் எதிரான போராட்டங்களை மாநிலம் தழுவிய அளவில் நடத்திய போதெல்லாம் அதுபற்றி கண்டுகொள்ளாத அல்லது இதுபோன்ற போராட்டங்கள் மாநில வளர்ச்சியைப் பாதிப்பதாக மட்டுமே விஷத்தைக் கொட்டிய மலையாள மனோரமா உள்ளிட்ட ஏடுகள் மூணாறு தோட்டத் தொழிலாளர்  போராட்டத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதன் நோக்கம் அது தன்னெழுச்சியாக வெடித்ததுதான். உண்மையில் இப்போராட்டம் திடீரென வெடிக்கவில்லை; நீண்டகால காரணங்கள் உள்நெருப்பாக  இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் குறிப்பாக வேலை நிறுத்தம் போன்ற பெரும் போராட்டங்கள் திடீரென ஒரு காரணமுமின்றி வெடிப்பதில்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை முதலாளிகள் + அரசாங்கம் என்ற கூட்டணி திட்டமிட்டு இழுத்தடிப்பது தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்யும் தந்திரம் மட்டுமின்றி தொழிற்சங்கத்தின்பால் தொழிலாளர்கள் கொண்டுள்ள நடவடிக்கைகளை சிதறடிக்கச் செய்வதும் தொழிற்சங்க இயக்கத்தை மழுங்கடித்து தேய்மானம் அடையச் செய்வதுமே ஆகும். இத்தகைய முதலாளித்துவ அரசியலுக்குத் துணைபோவதே கார்ப்பரேட் ஊடகங்களின் திட்டமிட்ட பணியாக குறிப்பாக 1990களுக்குப் பிறகு பார்க்கின்றோம். தொழிற்சங்க இயக்கத்தை என்பதைவிடவும் இடதுசாரி அரசியலைச்சார்ந்த தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தவதும் பின்னுக்குத் தள்ளுவதும்  ‘மெய்ன்ஸ்ட்ரீம் மீடியா' என்று சொல்லப்படும் கார்ப் பரேட் மீடியாக்களின் திட்டமிட்ட அஜெண்டாவாக மாறியுள்ளது.

பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் விசயத்திலும் மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் விசயத்திலும் நடந்தது இதுவே. கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளமரம் கரீம், “மூணாறு தோட்டத்தொழிலாளர் பிரச்னையில் தொடக்கம் முதலே சி.ஐ.டி.யூ தலையிட்டுவந்தது, எர்ணாகுளத்திலும் திருவனந்த புரத்திலும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு சி.ஐ.டி.யூ தலைவர்கள் களத்திற்கு நேரடியாகச் சென்ற போது தொழிலாளர்கள் அவர்களை வரவேற்றார்கள். வி.எஸ்.அச்சுதானந்தன் போராட்டம் முடியும் வரை அவர்களுடன்தான் இருந்தார்என்று சொல்கின்றார்.

6
முன்னரே சுட்டப்பட்ட ஜெய்ராம் “To the Brink and Back” என்கிற தனது நூலில் கூறுகின்றார்: “பு.பொ. கொள்கைகளின் நேர்மறை அம்சங்களெனில் நுகர் பொருட்கள் இப்போது மக்களுக்கு எளிதில் கிடைக்கின் றன; ஒரு தொலைபேசிக்காக ஒரு கேஸ் இணைப்புக்காக ரயில் டிக்கெட்டுக்காக நீண்டநேரம்  காத்திருக்க வேண்டி யதில்லை. ஆனால் எதிர்மறையாக மக்களிடையே சமத்துவமின்மை அதிகரித்துள்ளது, கல்வி- பொது சுகா தாரம் ஆகியவை சீரழிந்துள்ளன. கல்விநிலையங்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் கல்வியின் தரம் தாழ்ந் துள்ளது. சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் அரசின் பொது சுகாதார அமைப்பு (அதாவது சாமான்யக் குடிமக்களுக்கான மருத்துவம் பெறும் உரிமை) சீரழிந்துள்ளது. உதாரணமாக ஹைதராபாத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளன, உண்மைதான். ஆனால் அங்கிருந்து ஓர் அரை மணிநேரம் பயணம் செய்தால் அரசுத்தொடக்க நிலை மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகளின் எண்ணிக்கையைவிடவும் பெருச்சாளிகள், எலிகள், பூனைகள், சிலந்திவலைகளைத்தான் நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ்கட்சிக்காரான ஜெய்ராம் ரமேஷ் இந்தளவுக்காவது உண்மையைப் பேசினாரே என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.

பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வீதிப் போராட்டமாகட்டும், மூணாறு போராட்டமாகட்டும் பல்வேறு விசயங்கள் தெளிவாகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை, 1990களுக்கு முன்பிருந்த ‘அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள்' என்ற வகையினர் அரசுக்கு ஆபத்தான அணியினர் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட கொள்கை, எனவே எந்தெந்த வகையில் எல்லாம் தொழிலாளர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க முடியுமோ, ஏற்கனவே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் அணிகளைச் சிதைக்க முடியுமோ அதற்கான அத்தனை தந்திரங்களையும் செய்கின்றது. கட்டுரையில் தொடக்கத்தில் சொன்னபடி, வீதிகளிலும் சிறைகளிலும் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற, பல விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட வடிவாக்கப்பட்டுப் பெறப்பட்ட பல உரிமைகளை, யாரோவொரு அரசு அதிகாரியின் ஒற்றைக்கையெழுத்திட்ட அரசு ஆணைகள் மூலம்  (Executive Orders) அதிரடியாக நீக்குவதில் காங் கிரஸ் பாஜக இரண்டும் ஒருமித்த கூட்டாளிகளாகவே  நீடிக்கின்றன, இவ்விசயத்தில் இவ்விரண்டு கட்சிகளிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது. இதற்கு மாநிலக்கட்சிகளான தெலுங்குதேசம், திமுக, அதிமுக, பாமக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணைபோவதற்கு தயங்குவதில்லை.

ஏற்கனவே அணிதிரட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் இயங்கக்கூடிய அரசுத்துறை, அரசுத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைப்பளுவைக் குறைப்பது, அதாவது இவ்வேலைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு மாற்றுவது அல்லது இத்தொழில்களின் இறுதி உற்பத்திப்பொருட்களை வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்துகொள்வது, இதன் விளைவாக செயற்கையான உற்பத்திக்குறைவு மற்றும் செயற்கையான வேலைப்பளுவின்மையைக் காரணம்காட்டித் தொடர்ந்து ஆட்குறைப்புச் செய்வது, இறுதியில் அத்தொழிற்சாலைகளை மூடிவிடுவது. இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் பாரத் அலுமினியம் கம்பெனி, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ், பெங்க ளூரில் இருந்த இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்.எம்.டி.யின் பல யூனிட்கள், தமிழக அரசின் சிறந்த கனரகத்தொழில் பொதுத்துறை நிறுவனமான சதர்ன் ஸ்ட்ரச்சுரல் லிமிடெட் ஆகியவை.

நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒருபுறம், கணிணிமயம், தானியங்கி மயம் என்ற பெயரில் பல பத்துப்பேர்கள் செய்த வேலையை ஒரு சில தொழிலாளிகளை மட்டுமே வைத்துக்கொண்டு தொழிலை நடத்துவது மறுபுறம், இத்தகைய தொழிற்கலாச்சாரப் பின்னணியில்தான் உலக கோடீசுவரர்கள் வரிசையில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவில் பல தொழிலதிபர்களும் இடம் பெற்றள்ளார்கள் என்பதைத் தொழிற்சங்க இயக்கம் கவனிக்காமல் இல்லைதான்.

சமீபத்திய உதாரணமாக சேலத்தில் உள்ள மத்திய அரசின் உருக்காலைத் தொழிற்சாலையை தனியாருக்கு விற்று விட மோடி அரசு தீவிரமாக முயன்று வருகின்றது. 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் 181 கோடி ரூபாய் மூலதனத்தில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உருக்காலை தொழி லாளர்களின் உழைப்பால் இன்றைக்கு 3000 கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்துள்ளது. ஆலை இருக்கும் இடமான 2,500 ஏக்கர், வெற்றிடமான 1,500 ஏக்கர், ஏற்காட்டில் 10 ஏக்கர், குடியிருப்பு, பொது மருத்துவமனை, பொது நூலகம், பொதுக்கல்விச்சாலை ஆகியனவும் காலியிடத் தில் உள்ள தேக்கு, சந்தன மரங்கள் ஆகிய  சொத்துக்களை யும் சேர்த்துக் கணக்கிட்டால் இன்றைய மதிப்பில் 15,000 கோடிக்கும் அதிகம் என ஆலையின் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றார்கள். ஆலை நட்டத்தில் இயங்குவதாக பொய்க்கணக்கு காட்டுவதன் மூலம் அடிமாட்டு விலைக்கு மோடிக்கு பிரியமான ஒரு முதலாளிக்கு இந்த ஆலையை அதன் சொத்துக்கள் எல்லாவற்றுடனும் விற்கமுடியும், அத்தோடு அங்கே இயங்கிவரும் தொழிற் சங்க இயக்கத்தையும் ஒழித்துவிட முடியும்.  

இந்த வரிசையில் கேந்திரமான பல பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளும் காத்திருக்கின்றன. பாதுகாப்புத் துறையில் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, அதானி, லார்சன் அண்ட் டப்ரோ போன்ற பெருமுதலாளிகளையும் சர்வதேச பெருமுதலாளிகளையும் அனுமதிப்பதென மோடி அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டது.  இதன் மூலம் அரசின் தொழிற்சாலைகளை மூடிவிடுவது, அங்கே ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சங்க இயக் கத்தை அழிப்பது என இரண்டு நோக்கங்களை அரசால் நிறைவேற்ற முடியும்.  ஒரு சில லட்சங்கள் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தம் தொழிலையும் மாதாந்திர வருமானத்தையும் இழப்ப தோடு இத்தொழிற்சாலைகளில் இயங்கிவந்த உயிரோட்டமான தொழிற்சங்க இயக்கமும் சாகடிக்கப்படுகின்றது என்பதுதான் மையமான விசயம். ஆட்குறைப்பு, ஆலை மூடல் என்பது வெறும் ஊதியம், வைப்பு நிதி, ஓய்வூதி யம் போன்ற பணப்பலன் சார்ந்த விசயம் மட்டுமே அல்ல. அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம் எந்த ஒரு நாட்டின் பாட்டாளிவர்க்க அரசியல் இயக்கத்துக்கும் அடிப்படையான ஒன்று என்பதை இந்திய-சர்வதேச முதலாளித்துவம் நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. அத்தகைய அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் அழிப்பதில் சர்வதேச-இந்திய முதலா ளித்துவம் கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தாராளமய, தனியார்மய அடிப்படையிலான புதிய பொருளாதாரக் கொள்கை யில் அரசுசார்ந்த தொழில்களில் மேற்படி தேய்மானம் எனில் தவிர்க்க இயலாத வகையில் அதன் இயற்கையான தொடர்ச்சியாக இணையாக முறைசாராத அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளாக இந்த 25 ஆண்டுகளில் வளர்ந்து விட்டது கண்கூடு. உதாரணமாக முன்னர் குறிப்பிட்ட சேலம் உருக்காலையில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,200; ஒப்பந்த தொழிலாளர்கள் அதாவது நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 850. பொதுத்துறையான நெய்வேலி சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளரின் எண்ணிக்கை ஏறத்தாழ 10,000. மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான BSNLஇல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். முறையாக நிறுவப்பட்ட அரசு-அரசுசார் நிறுவனங்கள் மூடப்பட்டபின், தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு இருக்கின்ற தொழிலாளர் சட்டங்களை, உரிமைகளை மதிக்கும் என்பதற்கு பெங்களூரும் மூணாறும் நல்ல உதாரணங்கள். தனியார் தொழிற்சாலைகளில் ஏன் தொழிற்சங்க இயக்கம் கடந்த 25 வருடங்களில் தோல்வியடைந்துள்ளது என்பதற்கான காரணங்கள் இந்த இரண்டு உதாரணங்களிலும் மலிந்து கிடக்கின்றன. புதிய வகை ‘காண்ட்ராக்ட் தொழில்முறை'யை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அரசு நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கைக்கு இணையாக அல்லது அதிகமாக காண்ட்ராக்ட் ஊழியர் எண்ணிக்கை இருக்கிறது. இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். ஒருவகையில் நிரந்தரத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையே இது. இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலின் கீழ் வைத்திருக்கும் தந்திரமும் அடங்கியுள்ளது. ஆக நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் ஏற்கனவே இத்தொழில்களில் இயங்கிவரும் அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தைத் தேய்மானத்துக்கு இட்டுச்செல்வது. இணையாக நிரந்தரமற்ற காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் எவ்வகையிலும் ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் கீழ் திரண்டுவிடாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வது எனப் புதிய பொருளாதாரக் கொள்கை இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது.

இத்தனை அழுத்தங்கள் அடக்குமுறைகளையும் மீறிப் போராட்டங்கள் வெடிக்கும்போது ஹரியானாவில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நிகழ்ந்ததைப்போல் அரசு, தனது அடக்குமுறைக்கருவியான போலிசை ஏவி ரத்தக்களறியை உருவாக்கி அடக்குகின்றது. மாருதி சுசுகி யின் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் சிறைகளில் இப்போதும் அடைக்கப்பட்டுள்ளார்கள். சாலையில் டிராபிக் சிக்கலில் சிக்கிக்கொண்டதால் எரிச்சலுற்ற நீதிபதிகள் தாமாகவே முன்வந்து ‘பொதுநலன்கருதி வழக்குகளைத் தொடர்ந்துகொள்வதைப் பார்க்கின்ற இந்திய சமூகத் தால், மாருதி சுசுகி தொழிலாளர்கள்பால் நீதிமன்றங்கள் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கின்றன என்பதையும் தெளிவாகவே பார்க்க முடிகின்றது.

ஹரியானாவில் ஹீரோ ஹோண்டா தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுபயங்கரமான போலீஸ் அடக்குமுறையும், சில வருடங்களுக்கு முன் ஆந்திரா வில் தெருவில் இறங்கிப் போராடிய விவசாயிகள் மீது ஆள் உயர லத்திகளைக் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்த தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வின் போலீஸ் அடக்குமுறையும் திட்டமிட்டவை, போராட எத்தனிக்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்துபவை.

இதற்குச் சமமாக தொழிலாளர்களின் போராட்ட உணர்வை, தொழிற்சங்கக் கோபாவேச உணர்வை மட்டுப்படுத்தவும் முழுங்கடிக்கவும் அரசு நடத்தை விதிகளைக் காரணம் காட்டி மிரட்டுவது, தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு பணிபுரியும் ஊழியர்களை பழிவாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளோடு,  பல்வேறு திசை திருப்பல் வேலைகளையும் அரசு நிர்வாகம் செய்வதற்கு தயங்குவதில்லை. அரசு ஊழியர்களுக்கு அரசு நிர்வாகமே யோகா நிபுணர்கள்,  மனவள நிபுணர்கள், ஆற்றல் வல்லுநர்கள் போன்ற பல பெயர்களில்  ஆர்.எஸ்.எஸ் சாமியார்களைக் கொண்டு பயிற்சி நடத்துகின்றது. ‘சைவ' உணவின் அருமைபெருமைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மனஅமைதிஅதாவது போராட்ட உணர்வுகளோ அநீதி கண்டு ஆவேசப்படும் உணர்வுகளோ அற்ற ‘கொந்தளிப்பற்ற அமைதியான சாத்வீக மனநிலைகொண்ட ப்ராய்லர் கோழிகளாக அரசு ஊழியர்களை திட்டமிட்டு மாற்றும் வேலை சமீபகாலங்களில் தீவிரமாக நடக்கின்றது. அரசு ஊழியர்களின் பொழுதுபோக்கு மன்றங்கள் மனமகிழ் மன்றங்கள் ஆகியன இத்திட்டமிட்ட  பிரச்சாரத்துக்குத் துணை போகின்றன. விஞ்ஞானம், மருத்துவம் என்ற பெயரில் தெருவோர காயகல்ப லேகிய ரேஞ்சுக்கு யோகா விற்பனை முடுக்கிவிடப்படுகின்றது.

மதச்சாற்பற்ற' இந்திய நாட்டின் ராணுவம், சங் பரிவார சாமியாரான ரவிசங்கரின் யமுனை நதிப்பிரச்சாரக் கூட்டத்துக்கு  எடுபிடி வேலை செய்ய ஏவப்பட்டது. வாழும் கலை என்ற பெயரில் யமுனை நதியின் பல்லுயிர்ப் பெருக்கமும் சுற்றுச்சூழலும் சாகடிக்கப் பட்டது. பாரத் மாதாவின் மிலிட்டரி அதிகாரிகளும் மிலிட்டரி லாரிகளும் சீருடைகளை அணிந்து சங் பரிவார சாமியாருக்கு விசுவாசமான சங்பரிவார் ஊழியர்களாக மாறி களத்தில் இறங்கி வேலை செய்ததை ஏதோ தேசபக்தியின் முக்கிய அம்சமாக மீடியாக்கள் செய்தியாக்கின எனில், ஒருங்கிணைக்கப்பட்ட- அணிதிரட்டப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கூட இந்த இந்துத்துவா அரசியல் பிரச்சாரத்தை எதிர்த்து பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் ஏதும் எழுப்பவில்லை என்பதை எப்படி பொருள்கொள்வது? அரசு அலுவலகங்கள் ஆர்.எஸ்.எஸ்சின் மடமாக மாற்றப்படுவதை தொழிற்சங்கங்கள் இப்போதும் உணர்ந்ததாக தெரியவில்லை.  இது அணா பைசா விவகாரம் அல்ல, தத்துவம் சார்ந்த பிரச்னை என்பதைத் தொழிற்சங்கங்கள் உணர்ந்த தாகத் தெரியவில்லை. தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்தின் ஒருபகுதி காரணமாக அரசின் இந்த போராட்ட மழுங்கடிப்புத் திட்டம் இருப்பதை தொழிற்சங்கங்கள் உணரவேண்டிய கட்டத்தில்தான் இப்போதும் நிலைமை உள்ளது. இந்துத்துவா அரசியல்+ கார்ப்பரேட் முதலாளிகள்+அரசு எந்திரம் என்ற கூட்டணி இங்கே வெற்றி பெற்றுள்ளது.

தொழிற்சங்க இயக்கமும் அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்ற கோடிக்கால் பூதமும் ஒன்றிணையும் போது அது அடிப்படையான சமூக பொருளாதாரக் கேள்விகளை எழுப்புகின்ற அடிப்படை சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற பவுதீகச் சக்தியாக மாறும் என்பதை முதலாளித்துவம் நன்கு உணர்ந்துள்ளது.

பெங்களூரும் மூணாறும் ஒருவிசயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. எத்தகைய அழுத்தமான சிக்கலான புறச்சூழலிலும் தொழிலாளர்களின் நியாயமான அறச்சீற்றமும் கொடுமை கண்டு பொங்கும் நியாயமான கோபாவேச உணர்வும் மங்கிப் போவதில்லை.


முதலாளித்துவம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான எல்லாவிதமான தந்திரங்களையும் எல்லாக்காலத்திலும் செய்துகொண்டேதான் இருக்கின்றது. எல்லாவிதமான புதிய புதிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் தொழிலாளர்களின் அறச்சீற்றத்தையும் நியாயத்துக்கான கோபாவேச உணர்வையும் எவ்வாறு ஒரு பவுதீக சக்தியாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகளை, குறிப்பாக 1990 களுக்குப் பிறகான சூழலில், கண்டறிய வேண்டியது இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் இடதுசாரி இயக்கங்களின் கடமையாக இருக்கின்றது.

- புதுவிசை 47வது இதழ் ( டிசம்பர் 2016 )