Friday, November 4, 2016

யோகா: வரலாறும் பிரச்சாரமும் - ஜெயகாந்தன் மஞ்சாலுமூடு

னிதகுலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்துகின்ற ஒற்றை மூலிகையாக யோகாவை கடந்த ஜூன் மாதம் எல்லா பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் கொண்டாடின. ஜூன் 21-ஐ உலக யோகா தினமாக 135 நாடுகள் “ஆசன” விழாவாய் கோலாகலமாய் கொண்டாடியதாக செய்திகள் வெளிவந்தன. பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் ஆட்சியாளர்களும் தங்களுக்கு மலிவான விளம்பரமும் மத்திய அரசின் ஆசியும் பெற இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினார்கள். அறிவு படைத்தோரும் அறிவற்றவர்களும் ஒரு மாயவலையத்திற்குள் மாட்டியவர்களைப்போல் அதன் பின்னால் சென் றனர். 135 நாடுகளில் நடத்தப்பட்டதனால்(!) யோகா அறிவியல்பூர்வமான ஒன்றாகப் பிரச்சாரத் தம்பட்டங்கள் பரப்பப்படுகின்றன. உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் போதைப் பொருள் பழக்கம் உள்ளதினால் அதுவும் சரியான ஒன்றே என்று வாதிட மேற்கூறிய கருத்து உதவலாம். அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத பல்வேறு சிகிச்சை முறைகளை வளர்ப்பதற்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகை செலவிட்டு செயல்படுத்துகின்ற ஆயுஷ் துறையின் கீழ் யோகாவையும் உட்படுத்தியிருக்கிறது. சோதிடமும் இத்துறையின் கீழ்தான் இயங்குகிறது!  

சாதி மத அரசியல் பேதமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக யோகா இன்று மாறிக்கொண்டிருக்கிறது. சூரியநமஸ்காரம் தவிர்த்த யோகாவை வரவேற்பதில் பிரச்சினை ஏதுமில்லையென சில முஸ்லீம் அமைப்புகளும் கூறிவிட்டன. பாதிரிமார்கள் யோகாவை கற்பதிலும் கற்பிப்பதிலும் கிறிஸ்தவ விரோதமாக ஒன்றுமில்லையென அதன் மதத்தலைமை அனுமதியளித்துள் ளது. இந்திய மாநிலங்கள் அனைத்தும் யோகாவை அரசு விழாவாக கொண்டாடியபோது பீகார் மாநில அரசு மட்டும் அதை அரசு விழாவாக  நடத்தமாட்டோம் என முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வித்திட்டத்தின் கீழ் யோகா பயிற்சியளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் வலுப்பெறுகிறது. பல வருடங்களாக பள்ளிகளில் நடைபெற்றுவந்த உடற்பயிற்சி கல்வி இப்போது இல்லை, அதற்கான உடற்பயிற்சி ஆசிரியர்களையும் சமீப காலமாக நியமிப்பதில்லை. யோகாவில் பட்டம் பெறுபவர்களுக்கு யோகா ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் பெற வாய்ப்புகள் உருவாகின்றன. இலட்சக்கணக்கான ஆசிரியர்களை இப்படி நியமனம் செய்து சங்பரிவாரத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சிநிரல் அரசுத்திட்டமாக வெகுவிரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அபாயத்தை கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.

ஊடக கவனம் கிடைக்கிற, அனைவராலும் வரவேற்கப்படுகிற யோகாவைப் பற்றியும் அதன் வரலாறு மற்றும் நிகழ்காலத் தேவை குறித்தும் அறிவியல்பூர்வமான ஒரு அலசல் தேவைப்படுகிறது. அந்த அலசலின் ஒரு எளிய துவக்கமாக இக்கட்டுரை அமைந்தால் மகிழ்ச்சியே. இன்று கொண்டாடப்படுகிற யோகாவும் பழங்கால இந்தியாவின் நூல்களில் விளக்கப்படுகிற அல்லது பழக்கத்தில் இருந்த யோகாவும் ஏதேது கோணங்களில் ஒற்றுமைப்படுகிறது அல்லது வேற்றுமைப்படுகிறது என்று ஆராய்வது இதற்கு உதவியாக அமையும்.

யோகாவின் பழமை

மூன்று தலைகளோடு பத்மாசனத்தில் இருக்கிற ஒரு யோகியின் கற்சிற்பம் மொகஞ்சதாரோ-ஹரப்பா அகழ் வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்றது. இது சிவனின் சிற்பம் என்ற கருத்தும் உள்ளது. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே யோகா இந்தியாவில் பிரச்சாரத்தில் இருந்தது என்று வாதிடுவோரும் உள்ளனர். ஒரு சில உபநிடதங்களிலும், புத்த-சமண இலக்கியங்களிலும் யோகாவை விளக்கும் கருத்துக்கள் உள்ளன. ஸ்வேதசொதரோ உபநிடதம் யோகாவைப்பற்றி பல்வேறு அத்தியாயங்களில் விளக்கமாக கூறியிருக்கிறது. தலையும் கழுத்தும் மார்பும் நேராகப் பிடித்து உடல் அசையாமல் மனதையும் புலன் களையும் இதயத்தோடு ஒருங்கிணைத்தால் பண்டிதரான ஒருவர் பிரம்மம் எனும் தோணியேறி பயத்தின் எல்லா ஆறுகளையும் தாண்டலாம் என ஸ்வேதசொதரோ உபநிடதமும், ஐம்புலன்களும் மனமும் செயல்படாமல் இருப்பதும், புத்தி அசைவற்று இருப்பதுமான ஒரு பிரத் யேக நிலைதான் யோகா என்றும் புலன்களை ஸ்திரத்தன்மையோடு கட்டுப்படுத்த முடிகிற ஒருவருக்கு புத்தியின் ஊசலாட்டங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் கடோ உபநிடம் கூறுகிறது.

உபநிடதங்களிலும் புத்த-சமண இலக்கியங்களிலும் முக்கியமாக சாங்கிய தரிசனத்திலும் விளக்கப்பட்டிருந்த யோகா தத்துவங்களை ஒன்றுதிரட்டி ஒரு தனி தத்துவமாக உருவாக்கியவர் பதஞ்சலி எனும் முனிவராகும். “சமாதி, சாதன,விபூதி, கைவல்யம்” என்று நான்கு பகுதிகளில் 195 ஸுக்தங்களாக ஒரு சிறந்த கட்டமைப்புள்ள தரிசனமாக யோகாவை பதஞ்சலி உருவாக்கினார். மிகச் சரியானதொரு விளக்கத்தை யோகாவிற்கு பதஞ்சலி இவ்வாறு அளிக்கிறார்  “ யோகா சித்தவிருத்தி நிரோதா:” ஒருவருக்கு பல்வேறு உணர்ச்சிகள் உள்ளன, அவற்றின் வெளிப்பாடுகளே காம குரோத மோக போட்டி மனப்பான்மைகள். இவற்றிலிருந்து வெற்றி அல்லது விடுதலை கிடைத்தால் மட்டுமே அவருக்கு இயற்கையோ டான தொடர்பைப் பற்றிய தவறான ஞானம் அற்று “கைவல்யம்” அடையமுடியும். சித்த விருத்திகளிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டுமென்றால் ஸ்திரத்தன்மையற்ற மனதை மையப்படுத்தி நிலைபெறுவதற்கான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. “கைவல்யம்” அடைவதே யோகாவின் நோக்கம். இதை அடைய புருஷன் இயற்கையிலிருந்து வேறுபட்டவன் என்ற சரியான ஞானம் ஏற்படவேண்டும். புருஷன் அழிந்தாலோ கைவல்யம் அடைந்தாலோ இயற்கையானது மற்ற புருஷர்களுக்காக நிலைநிற்குமென்று யோகசூத்திரம் கூறுகிறது. அதாவது “சித்த விருத்தி நிரோதா” வழியாக கைவல்யம் அடைவதே யோகாவின் நோக்கமென்று யோகாவின் புராதனத் தத்துவம் கூறுகிறது.

அஷ்டாங்க மார்க்கம்

“யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரண, தியானம், சமாதி” எனும் எட்டுப்படிகள் யோகா பயிற்சியில் உள்ளன. எட்டுப்படிகளும் சரியான செய்முறைகளால் “பரமானந்தம்” எனும் முழுமையை அடையலாமென்று யோகா விளக்குகிறது. இந்த எட்டுப் படிகளில் ஒன்று மற்றொன்றிலிருந்து உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஆனால் இன்று ஆசன யோகா மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதுவும் யோக சூத்திரம் விளக்கும் படியாகவுமில்லை. எட்டுப்படிகளில் முதல் இரண்டு படிகள் ஒழுக்கமான வாழ்க்கை சம்பந்தப் பட்டதாகும். “அஹிம்சை, சத்யம், பிரமச்சரியம், அபரிக்கிரகம்” என்னும் ஐந்து விரதங்களாகும் யமம். இரண்டாம் படியில் அக-புற தூய்மை, தவம், மகிழ்ச்சி, சுயஞானம், ஈஸ்வர தியானம் ஆகியவை இடம் பெறுகின்றன. சுகமான அசைவற்ற இருப்பை (உட்காருதல்) ஆசனம் எனப்படுகிறது. உடலை அசைவற்ற நிலையில் சுகாசனத்தில் நெஞ்சையும் தலையையும் நிமிர்த்தி வைத்து நாலாம் படியான பிராணாயாமம் செய்யவேண்டியது. கட்டுப்படுத்தலுக்கு உள்ளாக்கிய மூச்சு இழுத்தலும் மூச்சு விடுதலும் தான் பிராணாயாமம். புறச்செயல்களிளிருந்து புலன்களை விலக்கி மனதை ஒருமுகப்படுத்துவதே பிரத் தியாகாரம். மனதை உடலின் புறமோ அகமோ உள்ள ஒரு பிரத்தியேகப் புள்ளியில் மையப்படுத்தி நிலைபெறச் செய்வது தாரண. இவ்வழிகளாக மனதின் ஒருமுகப் படுத்திய நிலையை எட்டுவது தியானம். தியான வழியாக உடலும் மனதும் ஒன்றோடொன்று இணைந்து இரண்டும் ஒன்றாக மாறுகின்ற ஒரு உன்னத வாழ்நிலையை சமாதியென்று கூறுகிறது. முற்றும் துறந்து புருஷன் பரபிரஹ்மத்திற்கு இணையாக தூய்மை பெறுவதே கைவல்யம். வாழ்க்கையிலிருந்து பரிபூரணவிடுதலை பெறுவதே பரமானந்தம் அதுவே கைவல்யம்.

இன்று யோகா சாமியார்கள் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையின் உயர் படிநிலைகளை எட்டியவர்களும் கோடீஸ்வரர்களும் ஆவர். அதுவே அவர்களுக்கு கைவல்யம். ஆசன யோகாவும் பிராணாயாமாவும் ஆகும். பாபா ராம்தேவின் விற்பனைச்சரக்குகள். ஸ்காட்லாந்தில் அவருக்கு ஒரு தீவே சொந்தமாக உள்ளது என்பது ஊரே அறிந்த செய்தி. யோகாவின் தந்தையான பதஞ்சலியின் பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்கிற வியாபாரியாகவும் யோகாவின் உயர்ந்தபடியான ‘சமாதி அல்லது கைவல்யம்” அடைந்தவராக(!) ராம்தேவ் திகழ்கிறார் என்பதிலிருந்தே நாம் சிலவற்றை ஊகித்துக்கொள்ள முடியும். டபுள்ஸ்ரீ ரவிசங்கர் சுதர்சன கிரியா என்று பெயரிடப்பட்ட பிராணயாமத்தை விற்பனை செய்கிறார். உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகள் விலை மதிக்கிற சொத்து இவருக்குண்டு. இவர்கள் மட்டுமன்றி யோகா சாமியார்கள் அனைவருமே சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கோடிஸ்வரர்களும் ஆவார்கள்.

                           II
இன்று பிரச்சாரம் செய்யப்படுகின்ற ஒரு யோகாசன முறையும் பதஞ்சலி முனிவரின் யோகா சூத்திரங்களைப் பின்பற்றப்படுவதில்லை. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு துவங்கப்பட்டதும் 15-16ஆம் நூற்றாண்டுகளில் வலிமையடைந்ததுமான ‘ஹடயோகத்தின்’ தத்துவார்த்த மிச்சசொச்சங்களும் நவீன உடற்பயிற்சி முறைகளும் சேர்ந்த கலவையே இன்றைய யோகா. இது புராதன இந்தியா அளித்த கொடையுமல்ல, நமது பாரம்பரிய சொத்துமல்ல, உலகிற்கு நாம் அளித்த விலை மதிக்க முடியாத அறிவுமல்ல.

ஹடயோகா

ஹடயோக பிரதிபிகையும் சிவசம்கிதையும் ஹட யோகாவை விளக்குகிற பழமையான நூல்கள். பதஞ்சலியின் தத்துவத்தோடு ஹடயோகத்திற்கு தொடர்பில்லை. பின்னாட்களில் வியாக்கியானம் செய்து செய்து தொடர்புபடுத்தினர். 1896ல் எழுதப்பட்ட விவேகானந்தரின் ராஜயோகம் ஹடயோகத்தைப் புறக்கணிக்கிறது. சரியான தியானத்திற்கு உதவக்கூடிய அளவிற்கு சரிவர உட்காருதல் என்ற முக்கியத்துவம் மட்டுமே ஆசனத் திற்கு விவேகானந்தர் அளித்துள்ளார். யோகதரிசனத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும் விவேகானந்தரின் இராஜ யோகம் எனும் நூல். 70 வருடங்களுக்குப் பிறகு பி.கே. எஸ்.அய்யங்கார் இயற்றிய “Light on Yoga” என்கிற நூல் யோகாவின் மறைநூல் என்றறியப்படுகிறது.  ஹட யோகம் மட்டுமல்லாது யோகதரிசனத்தில் ஏற்பட்ட எல்லா பரிணாமங்களையும் விளக்குகின்ற விதமாக இந் நூல் அமைந்துள்ளது. புதிய ஆசனங்கள் உருவாகியதும் யோகாவைப் பற்றிய புதிய நூல்கள் எழுதப்பட்டதும் இந்த நூலை அடிப்படையாக கொண்டேயாகும்.

ஒருவருக்கு முதுமை பாதிக்காத நிலையை உருவாக்கு வதே ஹடயோகாவின் இலட்சியம். பாலியல் சம்பந்த மான பூடகத்தன்மையுடைய செய்முறைகள் (erotico mystical practice) என்று ஹடயோகத்தை அழைக்கப்படுவதுண்டு. இயற்கை நியதிகளையும் விதிகளையும் மீறி வாழ்வதற்கான வழிமுறைகள் இதில் உள்ளடங்கியிருக்கிறது. “ஜரா-நர-மிருத்யுவை” ஜெயிப்பதாகும் அது. அதற் காக நாலுவிதமான முறைகள் உண்டு. “கிரியைகள், ஆசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம்”. இவற்றில் “கிரியைகள்” ஆறுவிதமுள்ளன. அவைகளை ஷட்கர்மங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவைகள் தவுதி, வஸ்தி, நேதி, திறாடக, நவுளி, கபாலபாட்டி. 

தவுதி என்பது வயிற்றை சுத்தப்படுத்துவதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி விழுங்கியப் பிறகு ஓர் ஓரத்தைப் பிடித்து திரும்ப இழுத்து எடுப்பது. நேதி என்பது ஒரு நூலினை மூக்கின் ஒரு துவாரம் வழியாக உள்ளே நுழைத்து இன்னொரு துவாரம் வழியாக இழுத்து எடுப்பது அல்லது தண்ணீரைப் பயன்படுத்தி இந்த மாதிரி செய்வது. நீர் எனிமா மூலம் வயிறைச் சுத்தம் செய்வது வஸ்தி. ஒரு பிரத்யேகப் புள்ளியில் கண்பார்வையை மையப்படுத்தி கண்களை தண்ணீர்மயமாக்கி சுத்தம் செய்தல் திறாடக. நவுளி என்பது வயிறை  எக்கி ஒட்டிப் பிடிக்கவைத்து மஸாஜ் செய்வது. கபாலபாட்டியானது வயிறை உள்ளாலே எக்கிஎக்கி மூச்சுக் கட்டுப்பாடு செய்வதாகும். கபாலபாட்டி தினமும் செய்தால் உடலில் ஒரு தனி ஆற்றல் உருவாகுமென்றும் அது இயற்கையான அணுக்கதிர் வீச்சு (natural radiation) என்றும் புற்று நோய் ஒழிய இது சிறந்த மருந்தென்றும் ஏழைகளான புற்றுநோயாளிகளுக்கு கபாலபாட்டியானது ஒரு வர தானமென்றும் ராம்தேவ் பிரச்சாரம் செய்கிறார். உடல் கூறு அறிவியல் பற்றிய அறியாமையால் பண்டைய ஹடயோகிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களை செய்தனர். ஆனால் இன்று வியாக்கியானங்கள் மூலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக யோகாவை பிரச்சாரம் செய்வதைத்தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

ஆசனங்கள்

சிவ சம்ஹிதா 84 ஆசனங்கள் பற்றி கூறினாலும் சித்தா சனா, பரமாசனா, உக்கிராசனா, ஸ்வச்திகாசனா ஆகிய 4 ஆசனங்களை மட்டுமே செய்முறைப்படுத்த வலியுறுத்துகிறது. ஸ்வச்திகாசனா, கோமுகாசனா, வீராசனா, கூர்மா சனா, குக்குடாசனா, உதனகூர்மாசனா, தனுராசனா, மத்சி யாசனா, பச்சிமதானா சனா, மயூராசனா, சவாசனா, பத்மாசனா, சிம்மாசனா, பத்திராசனா ஆகிய ஆசனங்கள் பற்றி மட்டுமே கூறுகிறது ஹடயோக பிரதீபிகை. இன்று பிரச்சாரம் செய்யப்படும் பல ஆசனங்களை இந்நூல்களில் பார்க்க முடியாது. ஆசனங்களை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்த B.K.S. ஐயங்காரின் நூலில் 200 ஆசனங்களும் அதற்கான 592 படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

முத்திரைகள்

மகாமுத்ரா, மகாபந்தா, மகாவேதா, கேஜரி, உட்யான பந்தா, மூலபந்தா, ஜலாந்தரபந்தா, விபரீதகரணி, வஜ் ரோலி, சக்திசாலனம் ஆகியவை. ஹடயோக பிரதீபிகையும் சிவசம்ஹிதையும் இந்த முத்திரைகளை ஒரே முக்கியத்துவத்தோடு விளக்குகின்றன. மரணம் மற்றும் முதுமையை வெல்வதற்கு இவற்றைச் செய்யவேண்டும் எனக் கூறுகின்றன. 

ஸ்தூல பிரபஞ்சமும் சூட்சும பிரபஞ்சமும் மனித உடலில் உள்ளன, ஆறும் கடலும் மலையும் சூரியனும் சந்திரனும் உடலில் உள்ளடங்கியிருக்கின்றன. பல்வேறு ரேதஸுக்களால் உருவான சந்திரன் சொர்க்கத்தின் ஒரு துளி அமிர்தமாகும். அமிர்து பொழிப்பது சந்திரனாகும். பனியும் மழையும் பெய்கிறதும் சந்திரனிலிருந்தாகும். சந்திரனிலிருந்து பொழிகிற அமிர்த ரசம் செடிகொடிகள் வழியாக மனிதனை அடைகிறது. சூரிய சந்திரன்கள் அமிர்தத்தைக் கைப்பற்ற நடத்துகின்ற பலபரீட்சையே பூமியில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறதென்று ஹடயோகிகள் நம்புகின்றனர். சூரியனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் சந்திரனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் உள்ளன. சந்திரன் அமிர்தத்தைச் சேமிக்கிறது, சூரியன் அதை அருந்தி வற்றச் செய்கிறது. சூரியனுக்கு ஆதிக்கம் வருகிற காலத்தில் நீர்த்தடங்கள் வற்றி வறள்கின்றன. அதுபோலவே மனிதனும். இதுதான் மரணத்தின் காலம்- உத்தராயன காலம். தட்சிணாயன காலம் என்பது சந்திரனுக்கு ஆதிக்கம் வருகின்ற காலம். அதாவது பசுமையின் காலம். பிரபஞ்சத்தின் இந்தக் கட்ட மைப்பு தான் மனிதனிலும் இருப்பதாக ஹடயோகிகள் அறிவியல் சமைக்கிறார்கள். சந்திரன் தலையிலிருந்து அமிர்து பொழிந்து கொண்டேயிருக்கிறது, சூரியன் அடிவயிற்றிலிருந்து அதை அருந்தி முடிக்கிறது. சந்திரன் பொழிகிற அமிர்தத்தை சூரியன் அருந்தி முடிப்பதனால் உடலில் நரையும் முதுமையும் ஏற்படுகின்றன. எனவே சந்திரன் பொழிகிற அமிர்தை சூரியன் அருந்தாமலிருக்க வேண்டுமானால் சூரியனை ஏமாற்றும் வகையிலான  விபரீதகரணி முத்திரையைச் செய்ய வேண்டும். கழுத்தை மடக்கி தரையில் குத்தி காலை மேல்நோக்கி நிறுத்தும் போது சந்திரன் பொழியும் அமிர்தம் தலையிலிருந்து கீழ்நோக்கி வந்து சூரியனுக்கு கிடைக்கும் வாய்ப்பு தடுக்கப்படும் விதமாக ரொம்பவும் புத்திசாலித்தனமாக வகுக்கப்பட்ட முத்திரையாம் இது. 

இந்த விபரீதகரணி முத்திரையின் நவீன பதிப்பாகும் சீர்ஷாசனம். தொடர்ந்து ஆறுமாதம் விபரீதகரணி செய்து வந்தால் ஜரா நரைகள் மாறும் என்றும் ஒரு நாளில்  இரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்துவந்தால் மரணத்தை வெல்லலாம் என்றும் ஐயங்கார் முதல் பழங்கால நூல்கள் வரை கூறுகின்றன. இந்தளவுக்கு முட்டாள் தனமான சித்தாந்தத்தை மறைத்துப் பிடிப்பதற்கு இன்று இதைச் செய்தால் ஜீரணசக்தி, மலச்சிக்கல், மூலம், பவுத் திரம், மாதவிடாய் பிரச்சினைகள், கருப்பை நோய்கள், மலட்டுத்தனம், பார்வைக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆசனங்களின் அரசனாக சீர்ஷாசனத்தை கொண்டாடுவதோடு தொய்வு ஏற்படுகின்ற மூளைக்கு டானிக்காகும் என்றும் இதன் மூலம் மூளையை நோக்கி ரத்தஓட்டம் அதிகரிக்கும் என்றும் போதிக்கிறார்கள். 

நமது மூளைக்குத் தேவையான ரத்தம் முறையாக கிடைக்கும் விதமாகத்தான் நமது உடற்கூறு பரிணாமம் வழி அமையப்பெற்றுள்ளது. மூளையின் அமைப்பு சம்பந்தமான அறியாமை பெரிய இன்னல்களை உருவாக்கும். மூளையை நோக்கிய ரத்தஓட்டம் கூடினாலோ குறைந்தாலோ பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். மிருதுவான உயிரணுக்களால் அமையப் பெற்றுள்ள மூளை இதன்மூலம் இற்றுப்போகவோ இறுக்கமேற் பட்டு நாசமடையவோ வாய்ப்பு அதிகமுள்ளது. கண்களில் திரவ அழுத்தம் அதிகரித்தால் Glukoma நோய் வருவதற்கு காரணமாகிவிடும்.

வஜ்ரோளி முத்திரை 

சந்திரனில் இருந்து பொழிகின்ற அமிர்தரசம் இரச தாது, இரத்த தாது, அஸ்தி தாது, மஜ்ஜ தாது, வேத தாது, சுக்ல தாது என்று ஆறு தாதுக்களாக பரிணமிக்கிறது. இதன் ஒவ்வொரு கட்டமும் உருவாகிவர ஐந்து நாட்களாகும், முப்பது நாட்களில் ரேதஸ் உருவாகிறது. இவ்விதம் உருவாகின்ற ரேதஸை பாதுகாப்பதே ஹடயோகியின் கடமை. அதற்கான இன்னொரு வழியே வஜ்ரோளி முத்திரை. ஆண் பெண்ணுடலில் செலுத்துகின்ற ரேதஸை திருப்பி எடுக்கிற செய்முறைதான் வஜ்ரோளி முத்திரை. அதற்காக கடுமையான பயிற்சிகளை ஹடயோகிகள் செய்யவேண்டியுள்ளது. ரேதஸ் சந்திரனுக்கு ஈடானதும் மாதவிடாய் ரத்தம் சூரியனுக்கு ஈடானதுமாகும். இரண் டும் யோகியின் உடலில் இணைக்கப்பட வேண்டும்.

சக்தி சாலன முத்திரை

குண்டலினியை உணர்த்துவதற்கான செய்முறை. ரேதஸை அமிர்தமாக்கி மாற்றுவது குண்டலினியாகும். மூலாதாரத்திலிருக்கிற குண்டலினியை படிப்படியாக மேல்நோக்கி உயர்த்தி சிரத்தில் சேர்க்கும்போது ரேதஸ் அமிர்தமாக மாறுகிறது. அது கீழ்நோக்கி பரவும்பொழுது உடல் முழுவதும் அமரத்துவத்தை எட்டுகிறது. வயிற் றின் கீழ்ப்பகுதியில் பாம்பை போன்று சுருண்டு தூங்குகின்ற குண்டலினியை உணர்த்துவதற்கு பத்மாசனத்தில் இருந்து பாதங்களை பயன்படுத்தி அழுத்தித் தொடுதல் வழியாகவும் வஸ்திரிகா பிராணாயாமம் வழியாகவும் இந்த முத்திரை செய்யப்படுகிறது.

கேஜரி முத்திரை

கீழ்த்தாடையிலிருந்து நாக்கின் தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து நாக்கின் வெளித்தள்ளுதலை நீட்டிக்கிற செயல். கண்ணிமைகளின் மத்தி வரை வளைத்துக் கொண்டுவருமளவிற்கு நாக்கை நீட்ட வேண்டும். சந்திரன் பொழிகின்ற அமிர்தத்தை நேரடியாக யோகி அருந்துவதற்காகத்தான் இது செய்யப்படுகிறது. செடி கொடிகளின் வழியாக கிடைப்பதில் ஏற்படும் சேதாரத்தை இது போக்குகிறது. நாக்கின் தொடுப்பு அறுந்தால் நாக்கு பின்னோக்கிச் சென்று சுவாசக்குழாய் அடைந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ள இச்செயலை இன்று எந்த யோகியும் செய்ய முன்வரமாட்டார்கள் என நம்பலாம்!. 

பிராணாயாமம்

நாடிகளைச் சுத்தம் செய்வதற்கான செய்முறை. இடா, பிங்களா என்ற இரண்டு நாடிகள் வழியாக மூச்சு இழுத்தலும் விடுதலும் நடைபெறுகிறது என்று ஹடயோகிகள் விவரிக்கிறார்கள். இரண்டு நாடிகளும் ஒன்றோடொன்று பிணைந்து இடது நாடி வலது மூக்கின் துவாரத்திலும் வலது நாடி இடது மூக்கின் துவாரத்திலும் திறக்கிறது. இந்த நாடிகளின் மத்தியின் ஊடே சுஷ்முனா கடந்து செல்கிறது. இதன் நீளம் மலத்துவாரம் வரை நீள்கிறது.  சுஷ்முனாவில் ஆறு சக்கிரங்கள் கீழிருந்து மேலாக அமைந்துள்ளன. இந்த நாடிகளில் படிந்திருக்கிற அழுக்குகளை சுத்தப்படுத்துவதே பிராணாயாமத்தின் நோக்கம். வலது மூக்கை இடதுகை விரல்களால் அடைத்து இடது துவாரம் வழியாகவும் அதேபோல் திருப்பியும் மூச்சு இழுத்தலும் விடுதலும் செய்தலே இந்த முறை. உடலின் மூச்சு இழுத்தல் விடுதல் சம்பந்தமான கற்பனைகளும் உடலியல் சம்பந்தமான அறியாமைகளும் முட்டாள் தனமான சித்தாந்தங்களை உருவாக்கிட வழிவகுத்தது. பரிசுத்தி என்ற ஜோடனைக்காக உருவாக்கப்பட்ட இம் முறைகள் இன்று புதிய விளக்கங்களோடு உலா வருகின்றன. இரத்த அழுத்தம், இதயகுழாய் கோளாறுகள், மூட்டுவலி, சைனஸைடிஸ், பராலிசிஸ், ஆஸ்துமா, ஒவ்வாமை முதலியவற்றுக்கான சர்வரோக நிவாரணியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சுதர்சன கிரியா பிராணாயாமம் அதி வளியோட்டத்திற்கு  (Hyper Ventilation) காரணமாகிறது. உடலின் கரியமில வாயுவின் நிலையை குலையச்செய்து இரத்த அணுக்க ளின் தேவையற்ற சுருங்கி-விரிவடைதல் மூலம் உடலின் பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. உடற்கூறியல் தொடர்பாக ஒரு ஆரம்பக்கல்வி மாணவனுக்குண் டான புரிதல்கூட இல்லாமல் மூடநம்பிக்கையானதும் கற்பனைகளில் மூழ்கியிருப்பதும் அறிவியலுக்குப் பொருத்தமற்றதுமான நம்பிக்கைகளும் விளக்கங்களும் தான் எல்லா யோகா முத்திரைகளிலும் ஆசனங்களிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு சிலது மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜரா நரைகள் பாதிக்காமல், முதுமை ஏற்படாமல் அனேகாயிரம் வருடங்கள் வாழ்வதற்கான மோகமும் அதற்கான செயல்திட்டங்களும் விளக்குகிற கற்பனாவாத சித்தாந்தங்களே யோகா தரிசனங்கள். இதுபோன்ற மோகமும் கற்பனையும் உலகம் முழுவதுமுள்ள பண்டைக்கால மனிதகுலத்திடம் இருந்தது என்பது வரலாற்று உண்மையே.

                              III

15 முதல் 18-ஆம் நூற்றாண்டுவரை ஹடயோகிக் குழுக்கள் இந்தியாவில் வலிமையாக இருந்தன. வணிகத்தின் போக்கை மட்டுமல்ல அரசரைக்கூட கட்டுக்குள் வைக்கும் வலிமையை இவர்கள் பெற்றிருந்தனர். கிழக்கிந்திய கம்பனியின் வருகை இவர்களின் வலிமையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஹடயோகிகள் யோகாவை ஒரு மேடை நிகழ்ச்சியாக மாற்றி வருவாயை ஏற்படுத்திக்கொண்டார்கள். உடலின் மெய் வழக்கங்களை காசாக மாற்றுவதற்கு சர்க்கஸ் முறைகளையும் யோகாவோடு இணைத்துக்கொண்டனர். தனிமையாகவும் மறைவாகவும் பிரத்யேகமான சூழலிலும் செய்யவேண்டியதென்று போதிக்கப் பட்டவை மேடைநிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டன.

இன்றைய யோகா

19 நூற்றாண்டின் மத்தியகால அளவில் உடலழகு மேம்படுத்தலில் ஒரு புதிய கலாச்சாரம் ஐரோப்பாவில் வளரத் துவங்கியது. ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக்கலைகள் முதலியவை பெரிய அளவில் பிரபலமடைந்தன. காலனியாதிக்க இந்தியாவில், உடல்வலிமையற்றவர்களே இந்தியர்கள் என்ற பிரச்சாரம் மேலோங்கி நின்றது. நவீன உடலழகுக்கலையின் தந்தையெனவும் ஐரோப்பாவின் நாயகன் எனவும் பிரபலமடைந்த யூஜின் சாண்டோ இந்தியாவிற்கு வந்து தனது பயிற்சித்திட்டத்தை சந்தைப்படுத்தினார். தனது பயிற்சித் திட்டத்தை பின்பற்றினால் இந்தியர்கள் ஐரோப்பியர்களைப் போல உடலழகையும் வலிமையையும் பெறலாமென்றும் அதுவே விடுதலைக்கான சிறந்த மார்க்கமென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. காலனியாதிக்க இந்தியாவில் இந்தக் கருத்து பல்வேறு குழுக்களிடையேயும் தனிநபர்களிடையேயும் பெரும் பிரச்சாரம் பெறவும் தாக்கம் ஏற்படுத்தவும் செய்தது. சாண்டோவால் கவரப்பட்டவரும் அவரது மானசிக சிஷ்யனுமாகிய அன்றைய ஒரு சிற்றரசாகிய அவுத்-தின் மன்னன் பிரடிநிதிபந்த், கருவிகளின் உதவி தேவைப் படாமல் செய்யப்படுகிற ஒரு உடற்பயிற்சி முறையை உருவாக்கினார். அதுவே சூரிய நமஸ்காரம். 20-ஆம் நூற்றாண்டின் ஒரு படைப்பாகிய சூரிய நமஸ்காரத்தின் மேல், பழமையானது என்று ஒரு போலிப்பெருமை  வர்ணம் பூசுப்பட்டதை தவிர வேறொன்றுமில்லை.

சாண்டோவால் உத்வேகமடைந்த ஜெ.சி.குணே (குவல்யானந்தா) இந்தியாவிற்கே உரித்தான ஒரு உடல்வலிமை திறம்படுத்துதல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென விரும்பினார். இதற்காக  ஐரோப்பாவில் அன்று பிரபலமடைந்திருந்த ஸ்வீடிஷ் உடற்பயிற்சி முறையான Ling முறையையும் இந்தியாவின் சில யோகாசன முறைகளையும் ஒன்றுபடுத்தி ஒரு கலவையாக மனம் மற்றும் உடல்வலிமையை வலுவாக்குகிற ஒரு உடற்பயிற்சி முறையை வடஇந்தியாவில் பிரச்சாரம் செய்தார். இதற்காக 1921ல் அவர் பம்பாயில் “கைவல்யதாமா” என்று பெரிய அளவிலான பயிற்சிமையம் ஒன்றை துவக் கினார். ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத்தலைவர்கள் இந்த மையத்தை பார்வையிட்டதனால் இது மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதே காலகட்டத்தில் தென் இந்தியாவில் கே.வி.அய்யர், டி.கிருஷ்ணமாச்சாரி போன்றோர் ஹடயோகாவையும் சாண்டோ பயிற்சி முறைகளையும் கலந்து புதுவிதமான ஆசனங்களைக் உருவாக்கி அவற்றுக்கு சம்ஸ்கிருத பெயர்களையும் சூட்டி பிரச்சாரம் செய்துவந்தனர். 1947 வரையிலும் டி.கிருஷ்ணமாச்சாரிக்கு மைசூர் அரண் மனையிலிருந்து யோகா பிரச்சாரத்திற்காக நிதி அளிக்கப்பட்டு வந்தது, அப்படி அது ஓர் அரசுத்திட்டமாகவே செயல்பட்டு வந்தது. சுதந்திர இந்தியாவில் அரசுத்திட்ட மாக அல்லாமல் மாறிய யோகாவை மறுபடியும் அரசுத் திட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தற்பொழுது மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது.

புராதன இந்தியாவில் மோட்சம் அடைவதற்காக (கைவல்யம்) துவங்கப்பட்ட யோகா பிறகு அமரத்துவம் பெறுவதற்கான ஒன்றாகவும், சிற்றின்பம் அளிக்கக்கூடிய தாந்திரிக முறையாகவும், 18ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு மேடை நிகழ்ச்சிகளான சர்க்கஸ் முறைகளாகவும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து உடலழகு / ஜிம்னாஸ்டிக் /சர்க்கஸ் முறைகளாகவும், 20ஆம் நூற்றாண்டில் உடற்பயிற்சியாகவும், இன்று மருத்துவமுறையாகவும் மாறி உள்ளது. பணம் ஈட்டுவதற்கான வழிகளில் மருத்துவத்துறை முதன்மையான இடத்தை எட்டியிருக்கிறது. இன்று அனைத்துமே சிகிச்சைமுறைகளாக சந்தைப்படுத்தப்படுகிறது. மியூசிக்தெரபி, அரோமாதெரபி, சைக்கோ-ரிலிஜியஸ் தெரபி, தியானசிகிச்சை என்பது போல் தற்பொழுது யோகா தெரபியும். 

புராதன இந்தியாவின் விசித்திரமான கற்பனைகளை நவீன அறிவியலோடு ஒத்துப் போவதற்கு பொருத்தமான காரணங்கள் இருப்பதாக நிறுவுவது என்ற  பிடிவாதம் தான் ஜே.சி.குணே போன்றவர்களுக்கு இருந்தது. இன்றைய யோகாவை ஒரு உடற்பயிற்சியாகக் கூட ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதன் பல பயிற்சிகளும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதும் தேவையற்றதுமாகும். யோகா சாமியார்களின் இது குறித்தான விளக்கங்களெல்லாம் உள்ளீடற்றவைகளும் அறிவியலுக்குப் பொருந்தாததுமாகும். யோகாவின் பின்னுள்ள சில மனோவியல் பயிற்சிகள் பலபேருக்கு ஒரு போதைச் சுக மனநிலையை அளிக்கிறது. போதைப் பொருள்களும் இதைத்தான் அளிக்கின்றன. இரண்டுமே கேடு விளைவிப்பதுகளே.

உதவிய நூல்கள் :
பாரதிய தர்சனம் - கெ.தாமோதரன்
இந்தியயுடே ஆத்மாவு- கெ.தாமோதரன்
வாழும் கலை - அருணன்
ஓஷோ தர்சனம் - ஜெயிம்ஸ்
ஓஷோ விமர்சனம் - இடமருகு
Dr.C. நாராயணன்- ஆய்வு உரைகள்.



No comments:

Post a Comment