மனிதகுலம் இதுவரை கண்டிராத கொடுங்கோன்மை
ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. சமூகத்தை சங் பரிவாரம் மற்றும் கார்ப்பரேட்டுகள்
என்கிற இரட்டை எஜமானர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் அடைப்பதற்காக அவர் அரசதிகாரம் முழுவதையும்
பயன்படுத்தி வருகிறார். நாட்டின் மாண்புடை அமைப்புகளை சீர்குலைத்து சிறுமைப்படுத்தும்
அவரது தான்தோன்றித் தனமான செயல்பாடுகள் கிண்டலுக்கும் கேலிக்குமுரியதாக வெளித்தெரிந்தாலும்,
அவை கோடானுகோடி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் நேரடியாக தலையிட்டு தீராத்துயரில் ஆழ்த்தி
வருகின்றன. வரலாற்றுப்போக்கில் உருவாகிவந்த தமது சொந்த வாழ்முறையைக் கைக்கொண்டிருக்கும்
குடிமக்களை அதன் பொருட்டே குற்றவாளிகளாக அறிவித்து தண்டிப்பதற்கு இயன்ற வழிகளிலெல்லாம்
அவரது கெடுமுயற்சி தொடர்கிறது. பண மதிப்பிழப்பு அடாவடி கூட உணவு, உடை, வழிபாடு, மதம்,
கல்வி, கருத்து வெளிப்பாடு என அனைத்துவகையான உரிமைகளையும் பறிப்பதற்கான அவரது முயற்சிகளின்
தொடர்ச்சிதான்.
பண மதிப்பிழப்பு அடாவடிக்குச் சொல்லப்பட்ட
காரணங்கள் யாவும் பொய்யென அம்பலமாகிவிட்டது. கறுப்பை கமிஷனுக்கு வெள்ளையாக்கும் புதுத்தொழில்
கனஜோராக நடக்கிறது. கைப்பொருளை தொலைத்தாற்போன்ற துக்கத்துடன் வங்கிகளின் முன்னே நாட்கணக்கில்
காத்திருக்கும் மக்களை மோடியின் நிழற்படையினரும் அதிகாரி களும் மிகுந்த ஆணவத்தோடு பரிகாசம்
செய்கின்றனர். மாற்றிமாற்றி பிறப்பிக்கும் குழப்படியான உத்தரவுகளால் ஒரு நிச்சயமற்றத்தன்மையை
ஏற்படுத்தி மக்களை நிரந்தரப்பதற்றத்திற்குள் ஆழ்த்தி ஆத்திரமூட்டுகிறார்கள். தெருவுக்கு
இழுத்தெறியப்பட்டதால் நிலைகுலைந்துப் போய் கொந்தளித்துக்கொண்டிருக்கும் மக்களிடமிருந்து
தாங்கள் வெகுவேகமாக தனிமைப்பட்டு வருவதை மறைக்க போலியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு
தம்மைத்தாமே மெச்சிக்கொள்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வை நிராகரித்துள்ள 69% வாக்காளர்களின்
பிரதிநிதிகள். அவை எழுப்பும் மக்கள்சார் பிரச்சினைகளை செவிமடுக்காது மமதையோடு சுற்றுகிற
பிரதமரை கண்டிக்காமல், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வீணாவதாகவும்
வரிப்பணம் விரயமாவதாகவும் சில ஊடகங்கள் பசப்புகின்றன. அமைதியாக நடக்கும் கூட்டங்களில்
மக்கள்விரோத சட்டங்கள்தான் நிறைவேற்றப் படுமெனில் அந்த நாடாளுமன்றம் நடந்தென்ன ஆகப்போகிறது?
பிரதமரின் இந்த துல்லியத்தாக்குதலால் சாகடிக்கப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்டோருக்கு
இரங்கல் தெரிவிக்கவும்கூட மனமற்ற அந்த கூட்டத்தொடர் அப்படியொன்றும் நாட்டுமக்களுக்கு
நலம் பயக்கும் முடிவுகளை எடுத்து விடப் போவதில்லை. ஆட்சியாளர்களின் அட்டூழியங்களுக்குப்
பதிலடி கொடுக்க அடுத்த தேர்தல்வரை மக்கள் காத்திருப்பார்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில்
நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை மக்கள் கவனத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.
-ஆசிரியர் குழு
கியூப மக்கள் வென்று வருவார்கள்
- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ் தமிழில்: எஸ்.வி.ராஜதுரை
செம்பதாகையின் ஒரு துளி ரத்தம்
லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின், புகாரின்
- ப.கு.ராஜன்
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
நந்திதா ஹக்ஸர்- தமிழில்: செ.நடேசன்
இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால்
- இக்பால்
நேர்காணல் : அருந்ததி ராய்
எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?
- ஐஸ்வர்யா சுப்ரமணியம் - தமிழில்: ராஜ்தேவ்
சிறுகதை : ரயில் பிரயாணம் - லி.ரா.
ப்ரமூதியா ஆனந்த தூர் : தீவுச்சிறையும் விடுதலை இலக்கியமும்
எஸ்.வி. ராஜதுரை
பிரதிகளுக்கு : ந.பெரியசாமி 9487646819
No comments:
Post a Comment